வெள்ளி, 30 மே, 2025

மாநிலங்களவைத் தேர்தல்: 2026ஐ எதிர்பார்க்கும் வைகோ - சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?

vaiko mk stalin

 tamil.samayam.com - மரிய தங்கராஜ்  :  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக வழக்கறிஞர் வில்சன், சண்முகம், புதுகை அப்துல்லா, சந்திர சேகர், பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் ஜூன் 19ஆம் தேதி இந்த இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது
இதில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். திமுக சார்பில் போட்டியிடுபவர்களின் பெயர்களை திமுக தலைமை ஏற்கனவே அறிவித்துவிட்டது. 
திமுக வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் மாநிலங்களவைக்கு செல்ல உள்ளனர்.



மதிமுகவுக்கு ஒரு மக்களவை இடம் மட்டும் தான்!
மக்களவைத் தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு இடம் மட்டும் ஒதுக்கப்பட்டது. அப்போதே ஒரு மாநிலங்களவை இடம் கொடுப்பதாக வாய்மொழியாக கூறப்பட்டது. கூட்டணி ஒப்பந்தத்திலேயே அதை குறிப்பிட வேண்டும் என்று மதிமுக சார்பில் கூறிய போது, உங்களுக்கு ராஜ்யசபா கொடுத்தால் காங்கிரஸ் கட்சியும் கேட்கும். எனவே அதை குறிப்பிட வேண்டாம் என்று திமுக தலைமை கூறியதாக சொல்கின்றனர்.

மாநிலங்களவை செல்லும் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஒப்பந்தம் செய்யும் போது மக்களவை இடங்கள் எதுவும் ஒதுக்கவில்லை, அதற்கு பதிலாக ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மதிமுக தொண்டர்களை சரிகட்டிய வைகோ
வைகோவுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படுமா என்பது ஆரம்பம் முதலே கேள்விக்குறியதாகவே இருந்து வந்தது. வைகோவும் தனக்கு சீட் தராவிட்டாலும் திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று கூறிவந்தார். தனது தொண்டர்களையும் அதற்கு தயார்படுத்தி வந்தார். எனவே திமுக தலைமை 4 பேர் பட்டியலை வெளியிட்ட போது மதிமுக பக்கமிருந்து பெரியளவில் அதிருப்தி குரல்கள் வரவில்லை.
2026 மாநிலங்களவைத் தேர்தல்
இது தொடர்பாக விசாரிக்கையில் மற்றொரு தகவலையும் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு மாநிலங்களவையில் மேலும் 6 காலி இடங்கள் உருவாகும். தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள திருச்சி சிவா, வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுக தம்பிதுரை, தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆகியோரது பதவிக்காலம் 2026 ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. எனவே 2026 மார்ச் மாதம் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும்.

அப்போதும் திமுகவுக்கு நான்கு இடங்கள் கிடைக்கும். அதில் ஒரு இடத்தை வைகோவுக்கு ஒதுக்கலாம் என திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம். இந்த தகவல் வைகோவுக்கும் பாஸ் செய்யப்பட்டுள்ளது. அதனாலே மதிமுகவினர் அமைதி காப்பதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தல் கணக்கு!
2021 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதை ஏற்று போட்டியிட்ட மதிமுக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை கடந்த முறையை காட்டிலும் கூடுதல் இடங்களை பெற வேண்டும் என மதிமுக முனைப்பு காட்டும். அதுமட்டுமல்லாமல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிட முயற்சிப்பார்கள்.

மக்களவைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டு துரை வைகோ வெற்றி பெற்றார். விசிக தொடர்ந்து தனி சின்னத்தில் களமிறங்கி கட்சிக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மதிமுக தேர்தல் ஆணையத்தில் இழந்த அங்கீகாரத்தை மீண்டும் பெறும் வகையில் அதிக இடங்களில் போட்டி, தனி சின்னத்தில் போட்டி என்ற முழக்கத்தை கூட்டணிக்குள் முன்வைக்கும் என்கிறார்கள்.
மரிய தங்கராஜ்

ஆசிரியர் பற்றிமரிய தங்கராஜ்காட்சி தொடர்பியல் பட்டதாரியான இவர் ஊடகத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். மின்னம்பலம் இணைய பத்திரிக்கையில் 2016ஆம் ஆண்டு சப் எடிட்டராக பணியை தொடங்கினார். அரசியல், சினிமா, கலை நிகழ்வுகள் குறித்து செய்திகள், கட்டுரைகள், திரை விமர்சனங்கள் வழங்கி வந்தார். சினிமா தொடர்பான மாத இதழ்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டு சமயம் தமிழ் செய்தி இணையதளத்தில் கண்டண்ட் புரொடியூசராக பணியில் சேர்ந்தார். தமிழக அரசியல் கட்சிகளின் சிறு சிறு அசைவுகள் தொடங்கி எதிர்கால திட்டங்கள் வரை அலசி, ஆராய்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். கட்சி நிர்வாகிகள், அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களை கேட்டு செய்திகள் எழுதி வருகிறார். மாவட்ட வாரியாக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வழங்குகிறார். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உருவாக்கம், நோக்கம், அவை செயல்படும் விதம், மக்கள் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து தொடர்ச்சியாக செய்திகள் எழுதி வருகிறார். வானிலை நிலவரம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திட்டங்கள், அறிவிப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தற்போது சமயம் தமிழ் செய்தி ஊடகத்தில் பிரின்சிபல் டிஜிட்டல் கன்டென்ட் புரொடியூசராக பணியாற்றி வருகிறார்

கருத்துகள் இல்லை: