சனி, 31 மே, 2025

தேமுதிக LK சுதீஷ் மாநிலங்கள் அவை எம்பியாகிறார் .. பச்சைக்கொடி காட்டிய எடப்பாடி!

 tamil.oneindia.com  - Vignesh Selvaraj  :  சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தர எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக பொருளாளர் சுதீஷ் ராஜ்யசபா எம்.பி ஆகும் காலம் கனிந்திருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன.
தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதிமுகவின் 2 மாநிலங்களவை வேட்பாளர்கள் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.



2024 மக்களவைத் தேர்தலின் போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி இடம் தருவதாக அதிமுக உறுதியளித்தது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். ஆனால் அப்படி எல்லாம் எந்த உறுதியும் தரப்படவில்லை என்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் தருவது அதிமுகவின் கடமை எனவும் பிரேமலதா வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் இன்று சந்தித்து பேசினார்.
எடப்பாடி உடன் சுதீஷ் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென தேமுதிக சுதீஷ் சென்று, ஈபிஎஸ்ஸை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் தர வேண்டும் என சுதீஷ் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்கப்படுவது உறுதி எனும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாள்களாக நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிகவுக்கு சீட் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே தற்போது சுதீஷ் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீட் தர எடப்பாடி ஒப்புதல்

மேலும், தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கி நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டால், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதீஷுக்கு தான் சீட் என்பது கிட்டத்தட்ட ஏற்கனவே முடிவாகிகிவிட்டது.

சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எல்.கே.சுதீஷ், "தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்​தார்​கள். இது முழுக்க முழுக்க உண்மை. நேரம் வரும்​போது அனைத்​தை​யும் வெளிப்படை​யாகச் சொல்​வேன். அதி​முக அளித்த உத்​தர​வாதத்​தால் தான் நான் 2024 மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட​வில்​லை." எனத் தெரிவித்திருந்தார்.
யார் இந்த எல்.கே.சுதீஷ்?

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தம்பி எல்.கே.சுதீஷ். விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். பின்னர் விஜயகாந்த் அரசியலில் அடியெடுத்து வைத்தது முதல் அவருக்குப் பக்கபலமாகச் செயல்பட்டு வந்தார்.

2005-ல் தென்​சென்னை மாவட்​டத்​தின் தலை​மைப் பொதுக்​குழு உறுப்​பினர் ஆக நியமிக்கப்பட்டார் எல்.கே.சுதீஷ். 2006 சட்​டப்​பேரவை தேர்​தலில் குடி​யாத்தம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்​டி​யிட்​டார். அந்​தத் தேர்​தலுக்கு பின் சுதீஷை இளைஞர் அணி செய​லா​ள​ராக நியமித்தார் விஜயகாந்த். 2009 லோக்சபா தேர்தலில் கள்​ளக்​குறிச்​சி​யிலும், 2014 லோக்சபா தேர்தலில் சேலத்​தி​லும் போட்டியிட்டார்.
தேமுதிகவின் முதல் ராஜ்யசபா எம்.பி

கடந்த 2017-ல் தேமுதிகவின் துணைப் பொதுச்​ செய​லா​ளராக நியமிக்கப்பட்டார். 2019-ல் மீண்​டும் பாஜக கூட்​ட​ணி​யில் கள்​ளக்​குறிச்​சி​ தொகுதியில் போட்​டி​யிட்​டார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் தேமுதிகவின் பொருளாள​ராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜ்யசபா உறுப்பினராக டெல்லி செல்ல இருக்கிறார் சுதீஷ். கடந்த 2006 முதல் பல்வேறு தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ள சுதீஷ், 2009, 2014, 2019 என 3 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், தேமுதிக சார்பில் முதல் ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்குச் செல்ல இருக்கிறார் சுதீஷ்.

Also Read
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்? எல்.கே.சுதீஷிடம் உறுதி கொடுத்த எடப்பாடி பழனிசாமி? நாளை அறிவிப்பு!
தேமுதிகவின் முதல் எம்.பி

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிக 29 இடங்களில் வென்றிருந்தது. அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போது தேமுதிகவுக்கு வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏக்கள் ஆதரித்தால் ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்போது தேமுதிகவின் 7 எம்.எல்.ஏக்கள் அதிமுகவை ஆதரித்தனர்.

இதனால் தேமுதிக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்றைய தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் தோல்வி அடைந்தார். அதன் பிறகு தேமுதிக சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறவில்லை. ராஜ்யசபா வாய்ப்பும் கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை.

இத்தனை ஆண்டு காலமாக எம்.பி பதவி என்பது எட்டாத கனவாகவே இருந்து வந்தது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவைக்கு தேமுதிக சார்பாக செல்ல இருக்கிறார் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ்

கருத்துகள் இல்லை: