மாலை மலர் : பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் ஒரு மேல் சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தி.மு.க. கூட்டணிக்கு சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் 4 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அதுபோல அ.தி.மு.க. கூட்டணி 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.
தி.மு.க. கூட்டணியில் வாய்ப்புள்ள 4 இடங்களில் கமல்ஹாசனுக்கு ஒரு எம்.பி. பதவி ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 3 இடங்களில் தற்போதைய எம்.பி. வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு மற்றும் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்படும் வழக்குகளை வில்சன் எம்.பி. திறம்பட கையாண்டு வருகிறார் என்ற நல்ல பெயர் இருக்கிறது.
சமீபத்தில் கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு வில்சன் எம்.பி.யின் முயற்சி மூலம் சிறப்பான வெற்றி கிடைத்ததாக தகவல் வெளியானது. இதனால் அவர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல அபிப்பிராயத்துடன் இருக்கிறார். எனவே வில்சன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விருப்பமாக இருக்கிறது.
அது போல தற்போதைய தி.மு.க. எம்.பி.க்களில் ஒருவரான எம்.எம்.அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.யாக இருந்த முகமது ஜான் திடீரென மரணம் அடைந்த நிலையில் அப்போது அந்த இடத்தை 2021-ம் ஆண்டு தி.மு.க. எம்.எம்.அப்துல்லா மூலம் நிரப்பியது.
அப்துல்லா இடைக்காலத்தில் எம்.பி.யாக பதவி ஏற்றதால் அவர் மேல்சபை எம்.பி. பதவியை 6 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்யவில்லை. வாய்ப்பு கிடைத்த பதவி நாளில் அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார். குறிப்பாக வெளிநாடு விவகாரங்களில் அப்துல்லா மூலம் தமிழர்களுக்கு சிறப்பான பணி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் எம்.பி.யாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தி.மு.க.வில் உள்ள இஸ்லாமிய தலைவர்களில் அப்துல்லா அளவுக்கு மேலிடத்துடன் நெருக்கமாகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதன் மூலம் சிறுபான்மை சமுதாயத்துக்கு வாய்ப்பு அளித்த பெருமையையும் பெற முடியும் என்று தி.மு.க. தரப்பில் கருதப்படுகிறது. எனவே அப்துல்லா மீண்டும் எம்.பி.யாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் எம்.எம்.அப்துல்லாவுக்கு அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்று விருப்பம் உள்ளது. ஆனால் மேல்சபையில் இஸ்லாமிய பிரதிநிதி மூலம் பல்வேறு வெளிநாட்டு பணிகளை செய்யும் முடியும் என்று கருதப்படுவதால் அப்துல்லா மீண்டும் எம்.பி.யாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வில்சன், அப்துல்லா, கமல்ஹாசன் ஆகிய 3 பேரும் தி.மு.க. தரப்பில் மேல்சபை எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்க வாய்ப்பு உள்ள நிலையில் 4-வதாக சண்முகத்துக்கு பதில் எம்.பி.யாக போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த 4-வது இடத்துக்கு புது முகத்தை கொண்டுவர தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
அந்த புதுமுகம் கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்களை சார்ந்த நபராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அ.தி.மு.க. தரப்பில் தென் மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் வேட்பாளரை பொறுத்து தி.மு.க.வில் அந்த வேட்பாளர் இருக்கலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் எம்.பி.யாக விரும்புவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இது தொடர்பாக பேசினார். ஆனால் தி.மு.க. எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
ம.தி.மு.க. தரப்பில் வைகோ மகன் ஏற்கனவே எம்.பி.யாக இருப்பதால் வைகோவுக்கு இந்த தடவை தி.மு.க. சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் 4-வது எம்.பி. பதவி இடத்தை பெற தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மற்றபடி தி.மு.க. மூத்த தலைவர்கள் யாரும் மேல்சபை எம்.பி. பதவிக்கு விருப்பம் தெரிவித்து அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. எனவே 4-வது எம்.பி.யாக தேர்வு ஆகப்போகும் புது முகம் யார் என்பதில் தி.மு.க.வினர் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. சார்பில் மேல் சபை எம்.பி. பதவிக்கு 2 பேரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலையில் அந்த பதவிகளை பிடிப்பதற்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செம்மலை, கோகுலஇந்திரா, தமிழ்மகன் உசேன், ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன், ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளருமான வக்கீல் ஐ.எஸ். இன்ப துரை, நடிகை விந்தியா உள்பட பலர் மேல்சபை எம்.பி.யாக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வெற்றி வாய்ப்பு உள்ள 2 எம்.பி. இடங்களில் ஒரு இடத்தை அ.தி.மு.க. நிச்சயம் தங்களுக்கு தரும் என்று தே.மு.தி.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் மிகவும் உறுதியாக நம்புகின்றன. இதற்காக திரைமறைவில் அந்த 2 கட்சிகளும் அ.தி.மு.க. தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியை அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சேர்ப்பதை உறுதிப்படுத்தும் வாய்ப்பாக இந்த தேர்தலை பா.ஜ.க. கருதுகிறது. எனவே டாக்டர் அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க செய்து கூட்டணியை வலுப்படுத்த பா.ஜ.க. தலைவர்களும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் மேல்சபை எம்.பி. பதவியை யாராவது ஒரு கட்சிக்கு வழங்கினால் மற்ற ஒரு கட்சி அதிருப்திக்கு உள்ளாகலாம். அதோடு அது அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைவதற்கு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
இதை கருத்தில் கொண்டு தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் மேல் சபை எம்.பி. பதவி வாய்ப்பை கொடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அ.தி.மு.க. சார்பில் 2 பேர் மேல் சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் தேர்வு செய்யப்படவுள்ள 2 மேல்சபை எம்.பி.க்களில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த நபர் புதுமுகமாக இருக்கலாம் என்றும், ஜெயலலிதா பாணியில் யாரும் எதிர்பாராத வகையில் அந்த புதுமுக வேட்பாளரை எடப்பாடி தேர்வு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் அ.தி.மு.க. சார்பில் எம்.பி.யாகும் வாய்ப்பு யார்-யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் தேர்வாகும் 4-வது எம்.பி. இடத்தை காங்கிரஸ் மேலிடம் கேட்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை தி.மு.க. தலைவர்கள் உறுதி செய்யவில்லை.
அது போல அ.தி.மு.க. கூட்டணியில் வாய்ப்பு உள்ள 2 இடங்களில் ஒரு இடத்தை பா.ஜ.க. கேட்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையை மனதில் வைத்து பா.ஜ.க. காய் நகர்த்துகிறதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, மேல்சபை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு இடம் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக