செவ்வாய், 27 மே, 2025

ஜூன் 19-ல் தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்:! திமுகவுக்கு 4 அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்க வாய்ப்பு பிருக்கிறது

 hindutamil.in  :  தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்பிக்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது. அந்த இடங்களுக்கு ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 9-ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 10-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூன் 12-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

ஒருவேளை போட்டி இருந்தால் ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் பாஜக எம்பி ரஞ்சன் தாஸ், அசாம் கணபரிஷத் எம்பி வீரேந்திர பிரசாத் பைஷியா ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 14-ம் தேதி நிறைவடைகிறது. இந்த இரு இடங்களும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

யாருக்கு எத்தனை இடங்கள்?- மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக எம்எல்ஏக்கள் வாக்கினை பதிவு செய்வார்கள். தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. திமுக, அதிமுக கூட்டணியில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது விரைவில் தெரியவரும்.

கருத்துகள் இல்லை: