கலைஞர் செய்திகள் :மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
”மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும்" : நிதி ஆயோக் கூட்டத்தில் CM MK Stalin வலியுறுத்தல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.
அதில், ”15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50%உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.
PM Shri திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால் SSA நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2024-2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ.2200 கோடி நிதி தமிழ்நாட்டிற்கு மறுக்கப்பட்டுள்ளது. ஒரு தலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும்.
நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும் நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை.
எனவே காவிரி, வைகை, தாமிரபணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்தக் கொள்வார்கள்” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக