ஞாயிறு, 18 மே, 2025

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? தைலாபுரத்தில் ராமதாஸ் ஆலோசனை!

 மின்னம்பலம் : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இன்று கட்சியின் இளைஞரணி, மகளிர் அணி சார்பாக மாநில- மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், சேலம் எம்.எல்.ஏ. அருள், மகளிர் அணியின் தலைவர் வழக்கறிஞர் சுஜாதா, செயலாளர் வழக்கறிஞர் தேவிகுரு செந்தில், செயலாளர் தமிழ்ச்செல்வி வரதராஜன், செயலாளர் காஞ்சிபுரம் சரளா ராஜ். கடலூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் கௌரி வீரராகவன் ஆகியோரும் மாணவர் அணி சார்பாக மாணவர் சங்க செயலாளர் முரளிசங்கர், மாணவரணி தலைவர் கடலூர் கோபிநாத், மாணவரணி செயலாளர் ஆளவந்தார், சேலம் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ஆத்தூர் செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி மற்றும் அவரது கணவர் பரசுராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



பாமகவில் ராமதாஸுக்கு ஆதரவாக இவ்வளவு பேர்தான் வந்தனரா? என அதிர்ச்சியுடன் கேட்க, இன்றைய கூட்டம் பற்றி விலாவாரியாக விவரித்தன பாமக வட்டாரங்கள். பொதுவாக பாமக கூட்டங்களில் அன்புமணியை பக்கத்தில் வைத்து கொண்டுதான் ராமதாஸ் பேசுவார். இன்று பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தனை பக்கத்தில் வைத்துக் கொண்டு கூட்டத்தை நடத்தினார் ராமதாஸ்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், நம்ம கட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை.. கட்சி எப்பவும் போல சிறப்பாகவே இருக்கிறது.. நீங்க யாரைப் பற்றியும் கவலைப்படாதீங்க.. இங்க வந்திருக்கும் மகளிர் மற்றும் மாணவர் அணியினர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 1,000 பேரை கட்சியின் உறுப்பினராக சேருங்க.. நாம தனித்தே போட்டியிட்டாலும் கூட 50 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். அதற்கான ‘டிரிக்ஸ்’ என்கிட்ட இருக்கு.. அதை அப்புறமா சொல்கிறேன். அதனால நான் சொல்றதை மட்டுமே செய்யனும்.. கட்சியில் அப்படி குழப்பம்.. இப்படி குழப்பம் இருக்கு.. அவங்க போயிடுவாங்க.. இவங்க போயிடுவாங்கன்னு சொல்றதை எதையும் நினைக்காதீங்க.. ஒரு குழப்பமும் இல்லாமலேயே நம்ம கட்சி செயல்படும்.. வரும் சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளில் நிச்சயம் நாம் ஜெயிப்போம்.. மீண்டும் மீண்டும் சொல்றேன்.. நான் சொல்றதை மட்டும் கேளுங்க என ‘பல பொடிகள்’ வைத்து பேசினார்.

இந்தக் கூட்டம் முடிந்த உடன், கவுரவத் தலைவர் ஜிகே மணியை அழைத்து தனியாகவும் ராமதாஸ் ஆலோசனை நடத்தினாராம்.

டாக்டர் ராமதாஸின் இந்த மூவ்கள் பற்றி பாமகவின் மூத்த தலைவர்கள் நம்மிடம் கூறுகையில், பாமகவில் பிளவு என்பதை இனி தவிர்க்கவே முடியாது என்ற நிலை வந்துவிட்டது. முதலில் அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் சிலரை அடுத்தடுத்து நீக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் ராமதாஸ். இதனைத் தொடர்ந்து அன்புமணியையும் கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிடுவார் ராமதாஸ்.. இதற்கு முன்னோட்டம்தான் இந்த இரண்டு நாட்கள் ஆலோசனைக் கூட்டம் என்கின்றனர்.

அன்புமணியின் ஆதரவாளர்களோ, ராமதாஸ் இப்படித்தான் செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. இன்றைக்கும் கூட எங்களது ஆதரவாளர்கள் சிலர் தைலாபுரம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கே நடந்ததை லைவ்வாக அப்படியே அன்புமணிக்கு தெரியப்படுத்தி வந்தனர் என்று கூறியதுடன், விரைவில் பாமகவில் இருந்து ‘நிறுவனர் தலைவர்’ ராமதாஸை நீக்கும் அறிவிப்பை ‘தலைவர்’ அன்புமணி அறிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் பாமகவில் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்களில் 80%-க்கும் அதிகமானோர் அன்புமணியின் பக்கமே நிற்கின்றனர். இதனால் அன்புமணியின் அறிவிப்புதான் செல்லுபடியாகும் என்கின்றனர்.

அதேநேரத்தில் பாமகவில் அப்பா- மகன் இடையே சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என நாம் கேட்டதற்கு, அப்படியான ஒரு நபர் இப்போதைக்கு பாமகவில் இல்லை என்பதுதான் நிஜம். ஜிகே மணிதான் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதாக பேட்டி தந்து கொண்டிருக்கிறார். ஆனால் இத்தனை குழப்பத்துக்குமே ஜிகே மணிதான் காரணம் என ‘கொலவெறியில்’ இருக்கிறதாம் அன்புமணி குடும்பம் என்கிற தகவலையும் டைப் செய்துவிட்டு Sent பட்டனை தட்டிவிட்டது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: