புதன், 6 ஜூன், 2012

Niththi:போதை ஊசி போட்டு காஞ்சி பெரியவரை கொன்றார்.

உழைத்து, உழைத்து ஓடாய் போனவர்கள் வாழும் நாட்டில். வறுமைக்கு வாழ்க்கைப் பட்டவர்களை பெரும்பான்மையாக கொண்டு வாழும் நாட்டில், இன்னும் மக்களை சேரியில் இருத்தி வைப்பதும், வாயில் மலம் திணிப்பதும், மலம் அள்ளுவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட சாதியார்களை மட்டும் கட்டாயமாக பணிக்கும் இந்த நாட்டில் கோடியாய் பணப்பரிமாற்றம் நடக்கிறது, மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்டு யார் கண்காணிப்புமின்றி கைமாறுகிறது. இதைக் குறித்து தட்டிக்கேட்க வக்கில்லாதவர்கள், சைவ வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்தான் மடத்திற்கு வரவேண்டும், நித்தியானந்தா சைவவேளாளர் இல்லை என்கிறார் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் கணபதி சந்தானம். இன்னொருவர் நித்தியானந்தா மண்டையிலிருந்து மயிரை மழிக்கவில்லை. ஆகையால் அவர் தகுதியற்றவர் என்கிறார்.
இந்துக்கள் அனைவரும் ஒரே சமூகம் என்பதுபோலும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை கயமைத்தனத்தோடு மறைத்துவிட்டு கிறித்துவ, இஸ்லாமியர், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வன்மத்தை வளர்த்தே அரசியலில் சுகம் காண துடிப்பவர்கள், புராணங்கள்  முழுக்க ஆபாச குப்பைகளை வைத்துக் கொண்டும், ஒழுக்க கேட்டையே பண்பாடாய் வைத்துக் கொண்டு ஊருக்கு ஒழுக்கம் கற்பிக்க முனையும் இந்து மதவெறி அமைப்புகளுக்கு நித்தியானந்தா தொண்டையில் சிக்கிய முள்ளைப்போல பெரிய இடைஞ்சலாக இருந்திருக்க வேண்டும். பெரிய மனப்போராட்டத்தை தந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அயோத்தியில் இராமர் பாலம் கட்டும் அதிஉயர்(!) பிரச்சினையை பற்றி பேசிய வாய்கள், மதுரை ஆதீனமாக மிகப்பொருத்தமாக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  இத்தனை  எதிர்ப்புகள் பதிவாகியிருக்காது.
இந்து மக்கள் கட்சி நித்தியானந்தாவை மதுரை ஆதீன பதவியிலிருந்து கீழிறக்கும் வரை போராடப் போவதாக அறிவித்திருந்தது. இன்னும் கூடுதலாக மதுரை மடத்திற்குள் புகுந்து சிவனை வழிபடுவோமென்று வேறு எச்சரிக்கை(!) செய்திருக்கின்றனர். இதைக்கண்டு சீற்றம் கொண்டோ, சிறிய/பெரிய அளவில் பணம் பெற்றோ கொஞ்சமும் வெட்கமின்றி தென்னாடு முன்னேற்ற கழக தலைவர் சரவணன் என்பவர், நித்தியானந்தா நியமனத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவரின் நியமனத்தை எதிர்த்து பேரணி நடத்துபவர்களுக்கு, எதிராக நான் பேரணி நடத்துவேன் என்று முனங்கியிருக்கிறார்.
தொலைக்காட்சிகளிலெல்லாம் தமிழ், தமிழ் என்று முழங்கும் நெல்லை கண்ணன் நித்தியானந்தா நியமனத்தை தடைச்செய்ய உயிரை கூட  கொடுப்பேன் என்கிறார். யாரும் இது சமூக பற்று  என்று கொள்ள வேண்டாம். இந்த சீற்றத்திற்கான காரணம் சைவ சாதி வெறிதான். இதுபோதாதென்று அங்கங்கு மடங்கள் என்னும் கடைவிரித்து தமிழ் வளர்ப்பதாய் கூறிக் கொண்டு தொப்பை வளர்த்து சொகுசாய் வாழும் அனைத்து மடாதிபதிகளின் கூட்டம், நித்தியானந்தாவை மடாதிபதியாக நியமனம் செய்ததை, 10 நாளில் திரும்பப் பெற வேண்டும் என்கிறது. இதற்கெல்லாம் அசராமல் பதிலளித்த நித்தியானந்தா, என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள் அவர்களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ரகசிய கேமராக்கள் வைப்பார்களா? நான் அதை வைக்க தயார். அப்போது தெரியும் பாலியல் குற்றச்சாட்டில் யார் சிக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
மக்கள் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்றுதான் நீதிகட்சி 1930களில் பல கோவில்களை அரசுடைமையாக்கியது. இன்று வீடியோ கண்காணிப்பில்லாமல்தான் இந்த மடங்களின் போலி புனிதம் காக்கப்படுகிறது என்று சொல்லாமல் சொல்கிறார் நித்தியானந்தா.
வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இந்த செட்டப்
நித்தியானந்தாவின் நியமனத்தின் மீது தொடர்ந்து விமர்சனம் வரவும் அருணகிரியார் ஒரு பேட்டியளித்திருந்தார், அதில், ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.  ஆக, தன் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இப்படியான நியமனத்தை வலிந்து நித்தியானந்தா பெற்றிருப்பதாக யூகிப்பது தவறாக இருக்க முடியாதென்றே தோன்றுகிறது.
மேற்சொன்ன நித்தியானந்தா எதிர்ப்புக்கெல்லாம் ஆதரவாக பேரதிர்ப்பை ஜகத்குரு ஜெயேந்திரர் தெரிவித்திருந்தார்.
ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். அவர் கூடவேதான் இருப்பேன்னு சொல்லி கூடவே இருக்காங்க. இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. திருஞான சம்பந்தர் வழியில் வந்த பெருமைவாய்ந்த மடத்திற்கு நித்தியானந்தா, ரஞ்சிதாவுடன் வருவது பெருத்த அவமானம். ரூ.1 கோடி லஞ்சமாக கொடுத்தே நித்தியானந்தா முடி சூட்டிக்கொண்டார். எனவே ஆதின மடத்தில் இருந்து நித்தியானந்தாவை உடனே வெளியேற்ற வேண்டும்.
கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் தன் மீது பாலியல் புகார் உள்பட சங்கர் ராமன் கொலை வழக்கு கூட உள்ளது, இந்த அயோக்கியத்தனங் களுக்கெல்லாம் சீனியர்  என்ற உணர்வேயில்லாமல் என்னை விடுத்து நித்தியானந்தாவை எப்படி தேர்ந்தெடுக்கலாமென்ற கோபம் வந்தாலும் வந்திருக்கலாம். ஆனால், இந்த எதிர்ப்பு அறிக்கைக்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் சங்கரமடத் திலிருந்து ஒரு அறிக்கை வந்தது.
சுவாமி நித்யானந்தா நியமனத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எந்தவித ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரியப் படுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விடுதலையில் வந்த செய்திகள் ஜெயேந்திரர் கவனத்திற்கு செல்லவும், எதிர்ப்பு என்னும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தனிக்கதை. ஜகத்குருவின் நேர்மையின்  யோக்கியதை  இந்த அளவில்தான் உள்ளது.
ஆனால், நித்தியானந்தா விடுவாரா? இந்து மதத்தை அம்பலப்படுத்துவதில் அவர் காட்டும் முனைப்பை நம்மால் ரசிக்காமலும் இருக்க முடியவில்லை.
ரஞ்சிதாவுடன் இருக்கும் நித்தியானந்தாவை மதுரை ஆதினமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார். ஆனால் என் மீது எந்த கொலை வழக்கும் இல்லை. அவர் மீது கொலை வழக்கு உள்ளது. குற்ற பின்னணி உள்ள அவர் என்னை பற்றி குற்றம் சொல்ல அருகதை இல்லை. அவர்தான் போதை ஊசி போட்டு காஞ்சி பெரியவரை கொன்றார். நான் மதுரை ஆதினத்துக்கு எந்த ஊசியும் போடவில்லை.
ஜெயேந்திரர் யோக்கியனாகும் முயற்சிக்கு மேற்கண்டவாறு நித்தி பதிலளித்ததும், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தன்னை நித்தி மொத்தமாக அம்பலப்படுத்திவிடக்கூடுமென்று சமாதானத்தூது அனுப்பியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: