செவ்வாய், 5 ஜூன், 2012

சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு பெரும் வெற்றி- முதல் முறையாக உச்ச மதிப்பெண் எடுத்து சாதனை

 Samacheer Kalvi Scheme Scores Maiden Sslc Exams
சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பல புதிய சாதனைகளை நிகழ்த்த காரணமாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து வந்த மாநில போர்டு, மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட நான்கு பாடத் திட்ட முறைகளையும் நீக்கி விட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தைத் தரும் வகையில் கொண்டு வரப்பட்டதே சமச்சீர் கல்வித் திட்டம்.
இதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக தனியார் பள்ளிகள் முரண்டு பிடித்தன. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்தையே தூக்கி குப்பையில் போட்டனர். ஆனால சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அரசின் முடிவை ரத்து செய்து சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டன.

இதையடுத்து 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கடந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் நடந்த முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முதலிடத்தைப் பிடித்த தஞ்சை மாணவர் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண் பெற்றுள்ளார். இது சாதனையாகும். காரணம், இதுவரை யாரும் இந்த அளவுக்கு மதிப்பெண் பெற்றதில்லை.

அதேபோல நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார் ஸ்ரீநாத். இதுவும் இதுவரை யாரும் செய்திராத சாதனையாகும்.

மேலும் முதல் முறையாக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற சாதனையும் ஸ்ரீநாத் புண்ணியத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வித் திட்ட பாடங்கள் மிகவும் இலகுவாகவும், சிறப்பாகவும் இருப்பதாக அது முதலில் அமல்படுத்தப்பட்டபோதே பாராட்டுக்களை வாங்கிக் குவித்தது. தற்போது அதற்கு மணிமகுடம் சூட்டப்பட்டது போல மாறியுள்ளது பத்தாம் வகுபபுத் தேர்வில் நிகழ்த்தப்பட்டுள்ள புதிய சாதனைகள்

கருத்துகள் இல்லை: