திங்கள், 4 ஜூன், 2012

ஜெயலலிதா எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கு முயற்சியில்

Viruvirupu
முதல்வர் ஜெயலலிதா இன்று டில்லிக்கு செல்வதற்கு, மத்திய திட்டக்குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு அதிக நிதி கோருவதற்காக என்பதுதான் பிரதான காரணம். ஆனால், அவர் செல்லும் தினத்தில் டில்லியில் மற்றொரு விஷயமும் நடக்கலாம். காங்கிரஸ் செயற்குழு இன்று கூடி, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நடந்தால் ஜெயலலிதாவின் டில்லி விஜயம், தலைநகர் மீடியாக்களில் மிகப் பெரிய அளவில் கவரேஜ் பெறும்.
ஏற்கனவே, காங்கிரஸ் தரப்புக்கு எதிர் வேட்பாளரை நோக்கி கையைக் காட்டியுள்ள ஜெயலலிதா, காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கு முயற்சியில் உள்ளார் என்று டில்லி அரசியல் சர்க்கிள்களில் ஒரு பேச்சு உண்டு.

அது உண்மையோ, இல்லையோ, டில்லி மீடியா அதை நம்புகிறது என்பது அவர்கள் வெளியிடும் செய்திகளில் இருந்து நன்றாகவே தெரிகிறது.
இந்த நிலையில்தான் இன்று காலை டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் ஜெயலலிதா. நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு செய்யப்படும் நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை, மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையில் இன்று டில்லியில் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்குமுன், நிறையவே ஹோம்-ஒர்க் செய்ய வேண்டியிருக்கும். அதிகாரிகளுடன் ஆலோசித்து, சரியான குறிப்புகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
மத்திய திட்டக்குழு கூட்டத்தில், அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாநில முதல்வர்கள் அல்லது நிதி அமைச்சர்களை கலந்து கொள்கின்றனர். தமிழக நிதி அமைச்சர் ‘அதி முக்கிய’ அலுவல்களை புதுக்கோட்டையில் கவனிக்க வேண்டியுள்ள காரணத்தால், அவரால் ஹோம்-ஒர்க் செய்ய முடியாது அல்லவா? அதனால், முதல்வரே நேரில் செல்கிறார்.
முதல்வர் டில்லியில் இருக்கும்போது (இன்று மாலையே சென்னை திரும்புவதாக திட்டம்) காங்கிரஸ் கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தால், அதுபற்றி முதல்வர் ஜெயலலிதா கூறும் கருத்தை கேட்க டில்லி மீடியா ஆர்வமாக இருக்கும்!

கருத்துகள் இல்லை: