வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மாவீரர் கிராமத்தில் ரங்கா :பிரபாகரனின் தேவைக்காக தம் உயிரை அர்ப்பணித்தவர்களின்

பிரபாகரன் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகளை ஒவ்வொருவரும் மீட்டிப்பார்க்க வேண்டும் பூநகரி மாவீரர் கிராமத்தில் ரங்கா எம்.பி உரை

வன்னியை முப்பது வருடங்களாகத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரபாகரன் அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கோ,அங்கு வாழ்கின்ற மக்களின் மேம்பாட்டுக்கோ எதுவும் செய்யவில்லை.மாறாக பிரபாகரனிட மிருந்து மக்களுக்கு இன்று எஞ்சி இருப்பது அழிவுகள் மாத்திரமே.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்தார்.பிரபாகரனின் தேவைக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த வர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கூட இன்று அரசாங்கமே மேற் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பூநகரி பிரதேசத்திலுள்ள மாவீரர் கிராமத்திலிருக்கும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.

பிரபாகரனின் தேவைக்காக தம் உயிரை அர்ப்பணித்தவர்களின் உறவினர்களது ஐநூறு குடும்பங்கள் இருக்கிராமத்தில் வசிக்கின்றன.இக்கிராமம் ஏற்கனவே முத்தப்பன் கிராமம் என அழைக்கப்பட்டது.இந்நிகழ்வில் எம்.பி. நாமல் ராஜபக்ஷ பாடசாலை உகரணங்களைப் பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் எம்.பி.ரங்கா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,வடபகுதியை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒரு வருட காலமாக பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.ஆனால் தமிழ் மக்களின் தலைவர் என்று கூறிய பிரபாகரன் கடந்த முப்பது வருடங்களாக வட பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகளை ஒவ்வொருவரும் மீட்டிப் பார்க்க வேண்டும்.

அவர் இப்பிரதேசத்தை தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தபோது ஒரு பாடசாலையையே, குளத்தையோ அபிவிருத்தி செய்தாரா?இல்லவே இல்லை.தமது மக்களின் வாழ்வையே இவர் அழித்து நாசப்படுத்தினார்.அந்த அழிவுதான் தமிழ் மக்களுக்கு எஞ்சியுள்ளது.தமது மக்களுக்கு மரணத்தைப் பெற்றுக்கொடுத்து அவர் தம் மக்களுக்கு வழங்கிய விடுதலை தான் என்ன.

நான் அரச சார்பு எம்.பி.அல்ல.ஆனால் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்யும் சேவைகளைப் பார்த்தே நான் அரச பக்கம் சார்ந்தேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை இருபது வருடங்களுக்கும் மேல் ஆட்சி செய்ய வேண்டும்.இந்தக் காலப் பகுதியில் அவர் முழு நாட்டிலும் குறிப்பாக வட பகுதியிலும் சுபிட்சத்தை ஏற்படுத்தித் தருவார்.அதனால் எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டியதில்லை.நாட்டுக்கென்று உயிரை மாய்த்துக்கொள்வதும் அவசியமில்லை. மாறாக நாட்டுக்குச் சேவை செய்யக்கூடியவர்களாக இப்பிள்ளைகள் மாறவேண்டும்.

அதற்குத் தேவையான கல்வியையோ,தொழிற் பயிற்சியையோ பெற்று தம்மை மேம்படுத்திக்கொள்வது அவசியம்.இதற்குத் தேவையான வேலைத் திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது என்றார்.

இந்நிகழ்வில் எம்.பிக்களான உதித லொக்குபண்டார,ஷெஹான் சேமசிங்க,கணக ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்

கருத்துகள் இல்லை: