வியாழன், 16 செப்டம்பர், 2010

புனர்வாழ்வு அடிப்படையிலேயே தயா மாஸ்டர் எமது நிறுவனத்தில் பணிபுரிகிறார்: ஷர்தார்

தயா மாஸ்டர் எமது நிறுவனத்தில் ஒரு நிறுவன உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் மாத்திரமே பணிபுரிகிறார். புலிகளிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் முகமாகவே தயா மாஸ்டருக்கும் நாங்கள் தொழில் வாய்ப்பினை வழங்கியிருக்கிறோம் என 'டான்' தொலைக்காட்சியின் பிரதம நிர்வாக அதிகாரி ஷர்தார் தமிழ்மிரருக்கு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் எமது நிறுவனம் அரச சார்பான நிறுவனம் எனவும் அரசின் பணிப்பிற்கிணங்கவே தயா மாஸ்டருக்கு தொழில் வழங்கியதாகவும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பொய்யான பிரசாரத்தினை சிலர் பரப்பி வருகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. புனர்வாழ்வு என்ற ஒரே நோக்கில்தான் நாங்கள் தயா மாஸ்டருக்கு தொழில் வாய்ப்பளித்தோம். இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. நல்லூர் உற்சவத்திலும் புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பமளிக்குமுகமாக இசைநிகழ்ச்சி ஒன்றினையும் நடத்தியிருந்தோம். தொடர்ந்தும் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முன்னாள் போராளிகள் விரும்புமிடத்து அவர்களுக்கான தொழில் வாய்ப்பினையும் வழங்க தயாராக இருக்கிறோம். அதேபோல்தான் தயா மாஸ்டர் எங்களுடைய நிறுவனத்தில் கடந்த 3 மாதகாலமாக பணிபுரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது என்று தமிழ்மிரருக்கு மேலும் தெரிவித்தார் ஷர்தார். இப்படியான பொய் பிரசாரங்களை மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்பிவந்தால், ஏனைய முன்னாள் போராளிகளுக்கு தொழில் வழங்குவதற்கும் மக்கள் பயப்படுவார்கள் என்பதனையும் 'டான்' தொலைக்காட்சியின் பிரதம நிர்வாக அதிகாரி ஷர்தார் மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை: