சனி, 18 செப்டம்பர், 2010

சர்வரோக நிவாரணி’ சுஜாதாநேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதல

சர்வரோக நிவாரணி’ சுஜாதாநேசிக்கத் தெரிஞ்சவனுக்கு..காதலி. வாசிக்கத் தெரிஞ்சவனுக்கு..சுஜாதா! தன் எழுத்தையே விற்கமுடியாத படைப்பாளர்கள் நடுவில..தமிழின் தவிர்க்கமுடியாத தனி சகாப்தம்..எழுத்தாளர் சுஜாதா!சுஜாதாவை பத்தி ‘கேப்ஸ்யூல்’ வார்த்தைல சொல்றதுன்னா..ராட்சஸன்! ஆகாயம் முதல் பாதாளம்வரை அத்தனை சப்ஜெக்ட்டுகள்லயும் விசுவரூபம் எடுத்து நின்னு விசும்பவெச்ச குசும்பன்! இதுக்குமேல பாராட்டுனா ‘போதும் ஜல்லியடிச்சது’னு சொல்லி சுஜாதாவே சிரிப்பாரு.

இந்த எழுத்துலகப் பிதாமகனை நான் சந்திச்ச சம்பவம் ஒவ்வொண்ணையும் சதா நினைச்சுப்பாத்து எனர்ஜி ஏத்திக்கறேன் ஜி! ‘ஆனந்த விகடன்’ல நான் இருந்தப்போ அடிக்கடி பேசியிருக்கேன். அந்த அறிமுகத்துல சுஜாதாவை நேர்ல சந்திக்கணும்னு ஆசைப்பட்டேன். ஃபோன் பண்ணேன். பேர் சொன்னேன்.

சுஜாதா ரொம்ப ரசனையான ஆசாமி!(அவர் ஸ்டைல்!) அற்பமானது..நுட்பமானதுனு பேதமில்லாம கவனிச்சு ரசிப்பார். ‘‘எம்.பி உதயசூரியனா! பேர் நல்லாருக்கே! காலைல பீச்சுக்கு வர்றீங்களா..ஈவ்னிங் வீட்டுக்கு வர்றீங்களா?’’னு மெல்லிசான குரல்ல கேட்டார். ‘‘பீச்சுக்கு வர்றேன் சார்’’னேன். அன்னிக்கு ராத்திரி என் தூக்கத்தை கெடுத்தது வேறெந்த கவர்ச்சிக்கன்னியும் கெடயாது..சத்தியமா சுஜாதாதான்!

பொழுது விடிஞ்சது. ‘காந்தி’ காத்து வாங்கற கடற்கரை. காத்திருந்தேன். ‘தேவன் வந்தார்’. இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கறவங்க விஷ் பண்ணிகிட்டே கடக்க..மையமா சிரிச்சுகிட்டே சுஜாதா ‘பைய்ய’ நடந்தாரு. பக்கத்துல போய் ‘‘வணக்கம் சார்’’னேன். ஒருநொடி என்னை உன்னிப்பா ‘ஸ்கேன்’ பண்ணிட்டு ‘‘வாங்க உதயசூரியன்’’னு அசால்ட்டா சொல்ல..என் நடுமுதுகு ‘திடுக்‘னுச்சு.

அதுக்கு முன்ன சுஜாதா என்னை முன்ன பின்ன (‘சிவாஜி’ பட காமெடியை யோசிச்சுராதீங்க!) பாத்ததில்ல! ‘‘அப்புறம் எப்டி சார் கண்டுபிடிச்சீங்க?’’ன்னு ஆச்சரியப்பட்டேன். அலட்டிக்காம சுஜாதா சொன்னாரு..‘‘பீச்ல என்னை பெரும்பாலும் பாக்கறவங்க ‘நீங்க சுஜாதாதானே‘ன்னு கேப்பாங்க. சிறும்பாலும் பாக்கறவங்க ‘யாரோ ஒரு மியூசியம் ஆசாமி’ன்னு திகிலா விலகிப்போவாங்க. இதுல ‘வணக்கம் சார்‘னு வந்தா அது நீங்களாத்தான் இருக்கணும்னு ஒரு குன்ஸா அடிச்சேன்’’னார் பாருங்க..அதான் சுஜாதா!

எழுத்துல ‘புலிப்பாய்ச்சல்’ பாயற சுஜாதா..பேசறப்போ அடிக்கற எக்கச்சக்க நக்கல்ல சிரிச்சே ‘குளிர்காய்ச்சல்’ வந்துரும். ‘குங்குமம்’ கட்டுரைத்தொடருக்காக சுஜாதாவை பலமுறை சந்திச்சேன். அன்னிக்கு செமஜாலி மூடுல இருந்தார். டேபிள்ல ‘மகாமகா தடிமனா’ ஒரு புத்தகம் இருந்துச்சு. ‘‘என்ன சார் இந்த புக் கல்லாப்பெட்டி சைஸ்ல இருக்கே’’னு கேட்டேன்.

அடுத்த நொடி..‘பம்பர் ப்ரைஸ் விழுந்தமாதிரி சர்ப்ரைஸ் ஆனேன். ஆமாங்க. அந்த கமெண்ட்டுக்கு ஒரு குழந்தையைப்போல வஞ்சனையில்லாம சிரிச்சார் சுஜாதா. எனக்கோ பெருமை தாங்கல! அதேஜோர்ல ‘‘சார்..இதை முழுசா படிச்சிட்டீங்களா?’’ன்னேன். ‘‘இப்பத்தான் பத்து பக்கம் முடிச்சிருக்கேன்’’னார். உடனே நான் ‘‘அப்போ நிச்சயம் இது ‘கல்லா‘ பெட்டிதான் சார்’’னு (‘கல்லாத‘!) சிலேடையில விளையாட..‘அட!’னு ஒரேவார்த்தையில நூறுகிலோவுக்கு பாராட்டினவர் ‘‘தமிழ் உங்களுக்கு சோறு போட்ரும்!’’னார்!

இனி சுஜாதா ரவுண்டு. பேசிகிட்டே என்னைப்பாத்தவர் ‘‘தாதுபுஷ்டி லேகியம் ஏதும் சாப்புடறீங்களா?’’ன்னார் சைலன்ட்டா. ‘‘ஐயையோ..இல்லையே சார்’’னேன்.‘‘அப்போ தாதுவை வீணடிக்கறதில்லபோல!’’னு அடுத்த பஞ்ச் வெச்சிட்டு ‘‘அதான் எப்பவும் உங்க முகத்துல ஒரு தேஜஸ் மின்னுது’’ன்னாரு கிண்டலா! கூச்சப்பட்டு சிரிச்சேன்.

‘‘இந்த கட்டுரைத்தொடரை ‘ஏன்..எதற்கு..எப்படி’மாதிரி கேள்வி பதிலா கொண்டுபோலாமா சார்?’’னேன். ‘‘வேணாம் வேணாம்! ‘ என்னை ஒரு ‘சர்வரோக நிவாரணியா‘ நினைச்சு ‘சொப்பன ஸ்கலிதம்.. விரை வீக்கம்..ஆண்மைக்குறைவு தீர என்ன வழி‘னு கேட்டே திணறடிச்சிருவாங்க! அப்புறம் அத்தனையும் எனக்கு வந்துரும்..கேள்விகளா!’’னு ‘நச்‘னு சொல்ல..சேர்ந்து சிரிச்சோம்.

‘கனவுத்தொழிற்சாலை‘யான கோலிவுட்டுக்கு சுஜாதாமேல ரொம்ப பாசம். அதிலும் ‘வித்தகன்’ பார்த்திபனுக்கு ‘விசித்திரன்’ சுஜாதான்னாலே அதீத மதிப்பு. இந்த மதிப்பு மனசளவுல இருந்தா பரவால்ல! சுஜாதாவோட இடுப்பளவுக்கு வந்து உடுப்பளவு மாறுனதுதான்..காதளவுக்கு சிரிக்கவெச்சது!

பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ கவிதைத்தொகுப்பு வெளியீட்டுவிழா. காமராஜர் அரங்கமே ‘தலை‘கட்டியிருந்துச்சு. முதல்வர் கலைஞர், சுஜாதா, பாரதிராஜா, பாக்யராஜ், சிவசங்கரி மேடையில இருக்காங்க. பார்த்திபன்தான் ‘புதுமைப்பித்தனாச்சே’! விடுவாரா? விழா வி.ஐ.பி.கள் அத்தனைபேருக்கும் (சிவசங்கரி தவிர!) பட்டுவேட்டி சட்டை எடுத்துத்தந்து கட்டிட்டு வரச்சொல்லியிருந்தாரு.

பாரதி.பாக்யராஜாக்களுக்கு பழக்கமானதுதான்! கட்டிகிட்டாங்க. ஆனா..பாவம் சுஜாதா! சேர்ல உக்காந்திருந்தப்போ வெவஸ்தை இல்லாத வேட்டியால ரொம்ப அவஸ்தையாதான் இருந்தாரு. பேச எந்திரிச்சப்போதான் சுஜாதா மந்திரிச்சுவிட்ட மாதிரி ஒரு தினுசா நடந்துவந்தாரு. ‘என்னடா‘ன்னு பாத்தா..‘சென்னையோட ஈஃபிள் டவர் போல..ஓங்கிவளர்ந்த பேனாவோட ரீஃபில் மாதிரி‘ இருக்கற சுஜாதாவோட இடுப்புல வேட்டி ‘இருக்கவா? நழுவவா?’னு ஊசலாடிகிட்டிருக்கு!

கடுப்பை அடக்கிகிட்டு இடுப்பை இறுக்கிகிட்டே ஒருவழியா மைக்கை பிடிச்சாரு சுஜாதா.

மத்த பேச்சாளர்களைப் போல ‘ஓசோன் ஓட்டையில விரலைவிட்டு ஆட்டறமாதிரி’ நீட்டி குரல் குடுக்காம.. ‘பி.பி.சீனிவாஸ் பி.பி.சி.நியூஸ்
வாசிக்கறமாதிரி’ நம்ம ஆசான் ஒரு ராகத்தோட..பேப்பர்ல எழுதிவெச்சிருந்ததை சூப்பரா படிச்சிகிட்டிருக்காரு!

ஒரு கையில பேப்பரையும், மறு கையில வேட்டியையும் இறுக்கி பிடிச்சுகிட்டு லேசான திகிலோட பேசி(!)முடிச்ச சுஜாதா..ஸ்லோமோஷன்ல வந்து அவரோட இருக்கைல உக்காந்தாரு. ஸ்..அப்பாடா! வேட்டி அவுந்து விழாம..இனிதே முடிஞ்சுச்சு
விழா!

மறுநாள்..சுஜாதாவுக்கு ஃபோன் அடிச்சேன். லைன்ல வந்தது ‘லயன்’! ‘‘சார்..நேத்து எல்லாரும் விழாவ பாத்துகிட்டிருந்தாங்க. நாந்தான் உங்க வேட்டி விழாம இருக்கணும்னு வேண்டிகிட்டிருந்தேன். ரொம்ப சிரமப்பட்டுட்டீங்களே சார்’’னேன்.

சன்னமா சிரிச்சவர் மின்னலா பொளந்தார் பாருங்க..‘‘குட்! ஷார்ப்பா கவனிச்சிருக்கீங்களே. பார்த்திபனோட விருப்பத்துக்காக வேட்டிக்கு ஓகே சொன்னேன். ஆனா..அதை இடுப்புல சுத்திகிட்டு நிறைய வி.ஐ.பி.க இருக்கற அந்த ஸ்டேஜ்ல விரைவீக்கம் வந்தவன்மாதிரி ஒரு தினுசா நான் நடந்துபோயிருக்கேன். நல்லவேளை..விழா பரபரப்புல யாரும் இதை கவனிக்கலை!’’னு அவர் சொல்லிமுடிக்க..வெடிச்சு சிரிச்சேன்.

தன்னை மட்டுமே மெச்சிக்கற சிலபல ரைட்டர்ஸ் மத்தியில..தகுதியிருக்கற படைப்பாளிகளை தன்னோட உச்சிமீது தூக்கிவெச்சு கொண்டாடின ‘ஞானத்தந்தை’ சுஜாதா! திறமையுள்ள இளம்படைப்பாளிகள்..கலிஃபோர்னியால இருந்தாலும் சரி..கரியாம்பட்டில இருந்தாலும் சரி..அவங்க சிறந்து விளங்கறதுக்காக தேடிப்‘‘படிச்சு‘‘ ‘பாராட்டு வெளிச்சம்’ பாய்ச்சற ‘கலங்கரை விளக்கம்’ சத்தியமா சுஜாதா மட்டுமே!

சுஜாதாவுக்கு வயசு ‘என்றும் பதினாறு’தான்! ‘பேச்சுலர் வாசம்’ அடிக்கற இவர் பேச்சுல ‘அந்தக்காலத்துல’ங்கற பழைய கோந்து பிஸினஸே கிடையாது. எப்பவுமே டீன்ஏஜ் டிக்கெட்டுகளோட லாங்குவேஜ்லதான் பூந்து விளையாடுவாரு!
‘‘எப்டி சார்‘‘னு கேட்டா..‘‘அதெல்லாம் ஜீனி வேலை!’’ம்பார் இந்த ‘ஜீனியஸ்’!

இன்னொரு சந்திப்புல..ஒரு பத்திரிகைக்கு ‘பொங்கல் ஸ்பெஷல்’ கட்டுரை எழுதிகிட்டிருந்தாரு. பேச்சுவாக்குல ‘‘தமிழர்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை என்ன?’’னு கேட்டாரு. ரெண்டு மூணு சொன்னேன். உதடு பிதுக்கினவரு ‘‘தின்பொருள் விக்கறவர்லேர்ந்து மென்பொருள்காரங்க வரைக்கும் அத்தனை தமிழர்களும் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘சூப்பர்’!’’னாரு. உடனே ‘‘சூப்பர் சார்’’னேன். ‘‘பாத்தீங்களா.. படுத்தறீங்களே’’ன்னாரு ர.சுருக்கமா!

‘மோதிரக்கையால குட்டுப்பட்டது’ங்கறதை மாத்தி ‘மேதையின் வாயால வெரிகுட்டு வாங்குனது’னு ஒரு சம்பவம் சொல்றேன். ‘குங்குமம்’ பத்திரிகைல ‘ஆ..அனுபவம்‘ங்கற தலைப்புல வெரைட்டியான அனுபவங்களை தொடரா எழுதிகிட்டிருந்தேன். அதுல ஒரு வாரம் ‘இப்படிக்கு நட்பு’னு ஒரு அனுபவம்!
ஆபீஸ்ல ஒரு மத்தியானம். திடீர்னு சிறப்பாசிரியர் ராவ் சார் கூப்பிட்டாரு. போனேன். ‘‘உங்க கட்டுரைய ரொம்ப நல்லாருக்குனு சுஜாதா பாராட்டினாரு!’’னு சொன்னாரு. அந்த நொடியில எனக்கு உண்டான பரவசத்தை ‘குண்டலினி யோகம்’கூட தந்திருக்காது! உடனே சுஜாதாவுக்கு ஃபோன் பண்ணேன். எடுத்தார்.

‘‘ரொம்ப தேங்க்ஸ் சார். நீங்களே பாராட்டினது’’னு நான் நீட்டி முழக்குனதை நறுக்குன்னு கத்தரிச்சவர் ‘‘அந்த கட்டுரை ரொம்ப நீட்டா..ஸ்வீட்டா இருக்கு.
பிரமாதமான ஸ்க்ரீன்ப்ளே. போதும் பத்திரிகை உத்தியோகம். உடனே சினிமா பண்ண கிளம்புங்க. ராவ் தடுப்பாரு. கண்டுக்காதீங்க. நாங்கள்ளாம் ‘பூட்ட கேஸு’.ஆல் த பெஸ்ட்!’’னு சொல்லி ஃபோன் ‘டொக்’. (இதே வாழ்த்தோடு மதன் சார் பேசுனது தனி பதிவுக்கு!)

‘சொர்க்கவாசல்’ திறக்கற ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சேவிச்சாலும்.. ‘சொர்க்கம் நரகம்ங்கிறதெல்லாம் உட்டாலக்கடி’னு சொல்றவரு இந்த ரங்கராஜன். ‘‘இறந்த பிறகு சொர்க்கத்துக்கு போகணுமா.. நரகத்துக்கு போகணுமானு கேட்டா..நரகத்துக்கு டிக்கெட் வாங்கத்தான் எனக்கு விருப்பம்! ஏன்னா..சொர்க்கம் போரடிக்கும். படுசுவாரஸ்யமான மனிதர்கள்லாம் நரகத்துலதான் இருப்பாங்க!’’னு ஜாலியா சொன்னவரு சுஜாதா!எதுக்கும்..வரப்போற ‘தீபாவளி ஸ்பெஷல்’ பத்திரிகைகளை வாங்கி ஆற அமரப் படிங்க! ‘சொர்க்கம் நரகம்’னுகூட வினோதமான கட்டுரை எழுதியிருப்பார் அமரர் சுஜாதா!

கருத்துகள் இல்லை: