வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மலேசியா...சென்னை சினிமா பைனான்சியர்...கதி என்ன?

சென்னை: மலேசியாவில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் உயிரோடு இருப்பதாகவும், அவர் உறவினர்களால் சிறை வைக்கப்பட்டு்ள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா பைனான்சியரான முத்துராஜா (38) சென்னை ராமபுரத்தில் வசித்து வந்தார். நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டத் தலைவராகவும் இருந்து வந்தார்.

மலேசியாவில் உள்ள தனது சகோதரர்களான சுரேந்தர், பத்மநாபன் ஆகியோரை சந்திக்க சமீபத்தில் அங்கு சென்றார்.

ஆனால், நாடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி உஷாராணி மலேசியா சென்று போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே முத்துராஜா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.

ஆனால், முத்துராஜா கொலை செய்யப்படவில்லை என்றும், மலேடசியாவி்ல் உள்ள அவரது உறவினர்கள் அவரைக் கடத்தி வைத்துள்ளதாகவும் எனவும் முத்துராஜாவின் மனைவி உஷாராணி கூறினார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உஷாராணி முத்துராஜாவின் 2வது மனைவி என்றும், முத்துராஜாவுக்கு ராமலட்சுமி என்ற மனைவி இருப்பதும் தெரியவந்தது.

ராமலட்சுமி செங்கோட்டையில் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். அவர் கூறுகையில்,
முத்துராஜாவுக்கும் எனக்கும் கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அவர் தொழில் விஷயமாக பல நாடுகளுக்கு சென்று வருவார். எங்கு செல்கிறார் என்பதை என்னிடம் கூறமாட்டார்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று எனது கணவரை கடைசியாக பார்த்தேன். பிறகு சென்னை சென்றவர் அதன் பிறகு வரவே இல்லை.

அவர் மலேசியாவில் இருப்பதாகவும், உஷாராணி என்ற காதலி இருப்பதாகவும் சிலர் கூறினார்கள். இந் நிலையில் எனது கணவர் முத்துராஜா கொலை செய்யப்பட்டதாக பத்திரிக்கைகளில் தான் செய்தியைப் பார்த்தேன்.

ஆனால், அவர் கொலை செய்யப்படவில்லை. உயிரோடுதான் இருக்கிறார் என்று மாமனார் கூறியுளளார். எனவே எனது கணவரை கண்டுபிடித்து தருமாறு முதல்வர் கருணாநிதிக்கு மனு அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: