செவ்வாய், 14 செப்டம்பர், 2010

சிவில் சப்ளை அதிகாரி மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து 2 நாளாக

தூத்துக்குடியில் மர்மமான முறையில் இறந்த சிவில் சப்ளை குடோன் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இரண்டாவது நாளாக நேற்று அரசு மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி அண்ணா நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் மீளவிட்டானில் உள்ள சிவில் சப்ளை குடோனில் துணை தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த குடோனில் பொருட்கள் திருட்டு போனது தொடர்பாக சிப்காட் போலீசில் முருகன் புகார் செய்தார். பின்னர் புகார் வாபஸ் பெறப்பட்டது. கடந்த 7-ம் தேதி காலை வேலைக்கு சென்ற முருகன் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்ததாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 11-ம் தேதி அன்று காலை இறந்தார்.

இது குறித்து சிப்காட் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் முருகனின் மரணத்திற்கு காரணம் விஷம்தான் என்று உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் முருகனின் உடலை பெற மறுத்து மருத்துவக் கல்லூரி முன்பு அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாவது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி விசாரணை நடத்த வேண்டும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: