வியாழன், 16 செப்டம்பர், 2010

பிரபாகரன் சரண் அடைய விரும்பி இருக்கவில்லை: கோட்டாபாய ராஜபக்‌ஷ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் சரண் அடைய விரும்பி இருக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபாய ராஜபக்‌ஷ இந்தியாவின் தி ஏசியன் ஏஜ் (The Asian Age) பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் அவர் முக்கியமாக தெரிவித்திருந்த சில விடயங்களாவன;
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சரண் அடைய விரும்பி இருக்கவில்லை. அதனால் தான் தோற்கடிக்கப்படுகின்றமைக்கு முதல் நாள் கூட புலிகள் பதில் தாக்குதல் ஒன்றை நடத்தித் தப்பிச் செல்கின்றமைக்கு முயற்சித்தனர்.
அவர்கள் சரண் அடைந்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
படையினர் ஏராளமான இழப்புகளுக்கு மத்தியில் உக்கிரமாகப் போரிட்டு வெற்றியை தொட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இறுதி நிமிடத்தில்தான் புலிகள் யுத்த நிறுத்தத்துக்கு தயார் என்று தூது அனுப்பினார்கள்.
ஆகவேதான் அக்கோரிக்கையை நாம் நிராகரிக்க வேண்டி ஏற்பட்டது. புலிகள் சரண் அடைய வருகின்றார்கள் என்று எமக்கு எவரும் அறிவித்து இருக்கவில்லை. நாம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் பற்றுறுதியாக செயற்பட்டமையாலேயே புலிகளை தோற்கடிக்க எமக்கு காலம் எடுத்தது.
பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பட்டிருக்காவிட்டால் 24 மணித்தியாலங்களுக்குள்ளேயே புலிகளின் இடத்தைப் பிடித்திருப்போம். ஆனால் எமக்கு அந்த இடத்தைப் பிடிக்க இரு மாத காலம் எடுத்துள்ளது.
ஆகவே நாம் எதிர்கொண்டிருந்த சவால்களை சர்வதேச சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நாடுகள் இலங்கையை கட்டாயம் முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுதல் வேண்டும்.
அரச படையினர் மனிதாபிமானத்தை ஒரு கரத்திலும், ஆயுதத்தை இன்னொரு கரத்திலும் ஏந்திக் கொண்டுதான் சண்டையிட்டனர் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபாய ராஜபக்‌ஷ அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: