சனி, 2 ஜனவரி, 2021

தமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்...?

தமிழகத்தில்   ஏப்., 7 சட்டசபை தேர்தல்...?
dinamalar : தமிழகத்தில், ஏப்ரல், 7ல் சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், ஏப்., 24க்குள் முடிவுகளை அறிவிக்கும் வகையில், ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம் வந்து, விரைவில் அரசியல் கட்சியினருடன் பேச்சு நடத்த உள்ளார்.

இந்த ஆண்டு, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிகிறது. தமிழகத்தில், 15வது சட்டசபையின் பதவிக்காலம், மே, 24ல் முடிவடைகிறது. அதற்குள், 16வது சட்டசபைக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை, தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த, 2016 சட்டசபை தேர்தல், மே, 16ல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை, மே, 19ல் நடைபெற்று, 23ல் பதவி ஏற்பு விழா நடந்தது. 'அக்னி'யில் தவிர்ப்பு!

இந்தாண்டு, அரசியல் கட்சிகளும், அரசு துறைகளும், தனியாரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வெயில் தாக்கம் அதிகரிக்கும் முன், தேர்தலை முடிக்க, ஆணையம் முடிவு செய்துள்ளது.
மே மாதம் முதல் வாரத்தில், அக்னி நட்சத்திர வீச்சு துவங்கி, மாத இறுதி வரை நிலவும்; அக்கால கட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், ஏப்ரல் இறுதிக்குள் தேர்தலை முடிக்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.பள்ளிகளின் பொதுத் தேர்வுகள், மாநில மற்றும் சி.பி.எஸ்.இ., தேர்வு தேதிகளுக்கு இடைஞ்சல் இல்லாமலும், தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

தோராய தேதி!

சி.பி.எஸ்.இ., தேர்வுகள் அனைத்தும் மே மாதம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாநில அளவிலான பாடத் திட்டத்திற்கான தேர்வு தேதி அறிவிப்புக்காக, தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது.
எந்தெந்த நாட்களில் தேர்தல் நடத்தினால், மக்களுக்கு வசதியாக இருக்கும்; ஏற்பாடு செய்வதற்கான அவகாசம் போதுமா; தேவையான பணியாளர்கள் எவ்வளவு; பாதுகாப்புக்கு எவ்வளவு பாதுகாப்பு படையினர் தேவை என்பது உட்பட, அனைத்து விவரங்களும் விவாதிக்கப்பட்டு, தேர்தல் தேதியை தோராயமாக நிர்ணயித்து விட்டது.

அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு, ஐந்து மாநிலங்களிலும் முடிந்து விட்டது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின், கட்சிகள் அடிப்படையிலான பேச்சு, தமிழகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த பேச்சின் போது, தேர்தல் தேதி, அனைவருக்கும் சரியானதாக இருக்குமா என்பது குறித்து, இறுதிகட்டமாக விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது.

ஒரே கட்டம்

பேச்சு முடிந்ததும், டில்லி அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சு நடத்தி, தேதி இறுதி செய்யப்படும். மார்ச் முதல் வாரத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
தற்போதைய நிலையில், மார்ச், 7, 10, 12 மற்றும், 16ம் தேதிகளில், நான்கு கட்டமாக, ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதில், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில், ஏப்., 7ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கட்சிகள் இதற்கு ஆட்சேபனை எழுப்பினால், தேதி மாறலாம். மேற்கு வங்கத்திற்கு, நான்கு கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில், எத்தனை கட்டமாக நடத்த வேண்டும் என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த நிலையில், ஏப்., 24ல் எண்ணிக்கை தொடங்கி, அன்றே முடிவு தெரிய வாய்ப்பு உள்ளது.

எதிர்பார்ப்பு

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஏப்., 12ல் ஓய்வு பெறுகிறார். எனவே, அன்றைய தினமே, சுஷீல் சந்த்ரா என்பவர், அந்தப் பதவிக்குப் பொறுப்பேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்திற்கான தேர்தல், ஏப்., 16ல் நடந்தால், புதிய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில், இங்கு தேர்தல் நடக்கும்.- புதுடில்லி நிருபர்

கருத்துகள் இல்லை: