சனி, 2 ஜனவரி, 2021

மீனவர் பிரச்னைக்கு கூட்டு ரோந்து இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை

latest tamil news
dhinamalar :கொழும்பு: தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக ரோந்து மேற்கொள்ள தயாராக உள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.  இலங்கை கடலோர காவல் படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள், 40 பேரை கைது செய்துள்ளனர். அவர்களின், ஆறு படகுகள் சிறை பிடிக்கப்பட்டன. வீடியோ கான்பரன்ஸ்இதையடுத்து, தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கும்படி, இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்திஉள்ளது.
இது தொடர்பாக, சமீபத்தில், இந்தியா - இலங்கை அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேச்சு நடத்தினர்.    இது குறித்து, இலங்கை மீன்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைவதால், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதை தடுக்க எடுக்கப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழக மீனவர்களிடம் ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்குவித்து, மாற்று வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, இந்திய அதிகாரிகள் விவரித்தனர்.

கடல் எல்லை தாண்டுவதால் இரு தரப்பு மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, இந்தியா - இலங்கை கடலோர காவல் படையினர் இணைந்து, ரோந்துப் பணி மேற்கொள்ளலாம் என, இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, இரு நாடுகள் இடையே, உடனடி தொடர்புக்கு, 'ஹாட்லைன்' வசதியை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.

 இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என, இந்தியா வலியுறுத்தியது. அதை இலங்கை அரசு ஏற்றுள்ளது. உரிய சட்ட நடைமுறைகள் முடிந்தபின், மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என, இந்தியாவுக்கு உறுதி அளிக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள, இந்திய துாதரக அதிகாரிகள் சந்தித்து பேசவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: