செவ்வாய், 29 டிசம்பர், 2020

பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா - 2 லாரிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன

maalaimalar : பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவுக்கு சொந்தமான 160 பொருட்கள் 2 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டன. பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா - 2 லாரிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன

>சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனி அரங்கத்தில் தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அரங்கை பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதன் பிறகு இளையராஜாவை எந்த பிரச்சினையும் இன்றி அங்கு எப்போதும் போல செயல்பட 

அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரசாத் ஸ்டூடியோ முன்பு போராட்டங்களும் நடைபெற்றன. அதற்கு பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இளையராஜா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.,,,,, 

 இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இரு தரப்பும் சமரசமாக செல்ல அறிவுறுத்தியது. இதனை ஏற்றுக் கொண்ட இளையராஜா, ஸ்டூடியோவில் ஒருநாள் மட்டும் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனது பொருட்களை எடுத்து கொள்கிறேன் என்றும் கோர்ட்டில் கூறி இருந்தார். 

இதன்படி நேற்று இளையராஜா தியானம் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இளையராஜா தரப்பில் இருந்து பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்றிருந்த வக்கீல்கள், ஸ்டூடியோ பூட்டு உடைக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.

ஸ்டூடியோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஒரு குடோனில் போட்டு வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று இளையராஜாவின் வக்கீல்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் இளையராஜாவிற்கு சொந்தமான பொருட்களை வக்கீல்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று எடுத்து சென்றனர். இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள், அவர் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் உள்ளிட்ட 160 பொருட்கள், 7 பீரோக்களில் பத்திரமாக அடுக்கப்பட்டது. பின்னர் அந்த பீரோக்கள் அனைத்தும் 2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன.

பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அரங்கில் 5 அறைகளை இளையராஜா தனது இசைப் பயணத்திற்காக பயன்படுத்தி வந்தார். பல்வேறு பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்துதான் தங்கள் பாடல்களை பாடி இருக்கிறார்கள். இப்படி இளையராஜாவின் இசைப் பயணத்தில் பிரசாத் ஸ்டூடியோ மிகவும் முக்கியமானதாகவே இருந்து வந்தது.

இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை தனது இன்னொரு வீடு போலவே பயன்படுத்தி வந்தார். இதன் காரணமாகவே தான் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் அனைத்தையும் அங்கேயே அவர் பாதுகாத்து வந்தார். இந்தநிலையில்தான் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருந்தது இளையராஜாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக வக்கீல்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை: