செவ்வாய், 29 டிசம்பர், 2020

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள்

dailythanthi :தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவை, நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5 மணியளவில் கோவை வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்- அமைச்சருக்கு ஒன்றும் தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையில் நிறைய பாலங்கள் கட்டியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அவருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

அவர்கள், சென்னையில் போரூர் பாலத்துக்கு அவசரமாக அடிக்கல் நாட்டி விட்டு நிலத்தை ஆர்ஜிதம் செய்யவில்லை. நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்று, அந்த பாலத்திற்கான பணிகளை மேற்கொண்டபோது நீதிமன்றத்துக்கு சென்று விட்டனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்த பின்னர் பணிகள் தொடங்கப்பட்டன. இப்படி அவசர கோலத்தில் டெண்டர் விடப்பட்டு பாலத்தின் பணியை பாதியில் விட்டு சென்றது தான் தி.மு.க. ஆட்சி.

அ.தி.மு.க. ஆட்சியில்தான் பாலத்தின் பணிகள் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. வடபழனி பாலம், எண்ணூர் முகத்துவாரம் பாலம், திருமங்கலம் முகப்பேர் சந்திப்பு பாலம், வியாசர்பாடி ரெயில்வே மேம்பாலம், திரு.வி.க. பாலம், அம்பத்தூர் ரெயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளன. எனவே புதிதாக எந்த பாலமும் கட்டவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டை அறிக்கை மூலம் மா.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ளார். பல்லாவரம் பாலம் கட்டி திறக்கப்பட்டது. வேளச்சேரி பாலம், கீழ்க்கட்டளை சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு, பெருங்களத்தூர் சந்திப்பு, மு.க.ஸ்டாலின் தொகுதியில் கொளத்தூரில் சந்திப்பு பாலம் இடது பக்கம் பாலம் கட்டப்பட்டுள்ளது.

கத்திவாக்கம் மேம்பாலம், வள்ளலார் மேம்பாலம், ரெங்கராஜன் பாலம் உள்பட 86 சிறிய பாலங்களை நாங்கள் கட்டியிருக்கிறோம். மேலும் 15 பாலங்களின் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வளவு பணிகள் சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இது தெரியாமல் மா.சுப்பிரமணியம் அவரது தலைவரை திருப்திபடுத்துவதற்காக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நான் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் நாங்களெல்லாம் ஊழல்வாதிகள் என்று கூறியிருக்கிறார். ஊழலுக்கு சொந்தகாரர்களே தி.மு.க. காரர்கள்தான். துரைமுருகன் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பு எவ்வளவு சொத்து இருந்தது. இன்று எவ்வளவு சொத்து உள்ளது. அன்றைய சொத்து விவரத்தையும், இன்றைய சொத்து விவரத்தையும் அவர் வெளியிடுவாரா?

இந்திய வரலாற்றிலேயே ஒரு நாடாளுமன்ற தேர்தலே நிறுத்தப்பட்டது என்று சொன் னால் எதற்காக நிறுத்தப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். இதையெல்லாம் மறந்து துரைமுருகன் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்.

நான் என்னுடைய சொத்து விவரங்களை கொடுத்திருக்கிறேன். அதுபோல அவருடைய சொத்து விவரங்களை வெளியிட தயாரா? ஏனென்றால் அவர் படிக்கிறபோது புரட்சித்தலைவரே உதவி செய்தார் என்று அவரே சொல்லியிருக்கிறார். படிக்கிறபோது அந்த காலத்தில் துரைமுருகன் அப்படி இருந்தார். இந்த காலத்தில் எப்படி இருக்கிறார்?

அண்மையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து பொய்யான அறிக்கை கொடுத்துள்ளனர். அது இன்னும் வேடிக்கை. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு டெண்டர் ரத்து செய்து விட்டனர். அதில் ஊழல் என்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைந்த பின்னர் இந்த இயக்கம் அழிந்து போய் விடும் என்று பார்த்தனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை. எங்கள் சட்டமன்ற உறுப்பினரிடையே குழப்பத்தை விளைவித்து ஆட்சியை கவிழ்க்கலாம் என்று சதித்திட்டம் போட்டனர். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை.

நடிகர் கமலஹாசனுக்கு என்ன தெரியும். அவர் தனது 70 வயது வரை நடித்து விட்டு ஓய்வு பெறும் காலத்தில் அரசியலுக்கு வந்துள்ளார். நான் 1974-ல் அரசியலுக்கு வந்தேன். 46 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன். 1989-லேயே சட்டமன்ற உறுப்பினராகி உள்ளேன். அவர் நடிப்பில் வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம். ஆனால் அரசியலில் அவர் பூஜ்யம் தான்.

எங்கள் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது. நாங்கள் முதல்- அமைச்சர் வேட்பாளர் அறிவித்து விட்டோம். எங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது தான் அ.தி.மு.க. வின் நிலைப்பாடு.

திரையரங்கம் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. அதை திறப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நடிகர் விஜய் என்னை சந்தித்து கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை: