திங்கள், 28 டிசம்பர், 2020

இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ செல்லாதது.. மன உளைச்சலில் இருப்பதால் இன்று அவர் வரவில்லை

minnambalam : இசையமைப்பாளர் இளையராஜா 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் தான் இசையமைப்பு பணிகளை செய்துவந்தார். தமிழ் சினிமாவுக்கு பிரம்மாண்டப் படைப்புகளையெல்லாம் அந்த ஸ்டுடியோவில் இருந்து தான் கொடுத்தார். இளையராஜாவின் செண்டிமெண்டான ஒரு இடமாக அது இருந்தது.இத்தனை ஆண்டுகளாகப் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இருந்தார் என்றால், அதற்கு காரணம் தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத் மற்றும் இளையராஜாவுக்கு இடையே இருந்த வாய்வழி பேச்சுவார்த்தையும், இளையராஜா மீது இருந்த மரியாதையுமே காரணம். இப்போது, பிரசாத் ஸ்டூடியோவின் ஓனர்கள் மாறிவிட்டார்கள். எல்.வி.பிரசாத்தின் அடுத்த தலைமுறையினர் நிர்வாகப் பொறுப்பை கையில் எடுத்துள்ளனர். அதனால், இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து காலி செய்யுமாறு கோரினார்கள். இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த மோதல் நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ செல்லாதது ஏன்?


இந்நிலையில், உடைமைகளையும் இசைக்கருவிகளையும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், ஸ்டூடியோவுக்குள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் இளையராஜா. நீதிமன்ற வலியுறுத்துதலின் பெயரில், சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிக்குள் உடைமைகளை எடுத்துவிட்டு வரவும், தியானம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, இன்று இளையராஜா ஸ்டூடியோவுக்கு வர இருந்தார். உடைமைகளை எடுத்துச் செல்ல இரண்டு லாரிகளும் ஸ்டூடியோவுக்கு வந்தது. அதோடு, ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் அங்கு கூடிவிட்டனர்.

இளையராஜா இன்று வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரசாத் ஸ்டூடியோவிற்கு அவர் வரவில்லை. இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால் இன்று அவர் வரவில்லை. முன்னதாக, இளையராஜாவின் ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, பத்திரிகையாளர்கள் கூடிவிட்ட செய்தியும் தெரிந்திருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த இளையராஜா இன்று வருவதை தவிர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

-ஆதினி

கருத்துகள் இல்லை: