ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று

BBC :  இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.`
கொரோனா தொடக்க அறிகுறிகள் தென்பட்டதால் , பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் அறிவுரைக்கேற்ப மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்`` என அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.
இந்தியத்தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அமித் ஷா ஈடுபட்டார்.கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக டெல்லி அரசுடன் இணைந்து தொடர் அலோசனை கூட்டங்கள் நடத்தியது, மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததது என களத்தில் இறங்கி அமித் ஷா பணிகளை மேற்கொண்டார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் தமிழக ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கடந்த ஜூலை 29-ம் தேதி ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உள்ளதாக அவருக்கு பரிசோதனை செய்த காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு பல்வேறு சோதனைகள் செய்ததில், அவர் உடல்நலன் சீராக இருப்பதாகவும், வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ள உள்ள ஆளுநரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: