புதன், 5 ஆகஸ்ட், 2020

லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலி: பிரதமர் ஹசன் டியப் அறிவிப்பு

 தினத்தந்தி :  பெய்ரூட்,   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்புகளும் கரும்புகைகளுமாக  வெளியேறியது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக பெய்ரூட் துறைமுகப்பகுதி மாறியது...
பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது.  இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து லெபானான் பிரதமர் கூறுகையில்,’’ எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில்  6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பிரச்சினையை சகித்துக்கொண்டு இருக்க மாட்டோம்’’ என்றார்.

கருத்துகள் இல்லை: