திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி கிடையாது... முதல்வர் திட்டவட்டம்!

மின்னம்பலம் : மும்மொழிக் கொள்கை முடிவு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.புதிய தேசிய கல்விக் கொள்கை 2020க்கு மத்திய மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியா? முதல்வர் திட்டவட்டம்!அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்கள் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன. இது சனாதன கல்வி முறையை புகுத்த முயல்வதாகவும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கிறது என்றும் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை-2020 ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனவும் செயல்படுத்திட மறுக்க வேண்டுமெனவும் ஸ்டாலின் தலைமையில் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதினர்.இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 3) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

1963 ஆம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களைப் பொறுத்தவரையில். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில்தான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், 1965 ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து மாணவர்களும் மக்களும் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களைத் தீவிரமாக நடத்தினர்மக்களிடையே மும்மொழிக் கொள்கையைப் பற்றி கவலைகள் நீங்காததால், அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968 அன்று 'தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது' என்று வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி, பாடத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது” என்ற வரலாற்றை சுட்டிக்காட்டினார்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இந்தித் திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர் என்ற முதல்வர், “இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழிவந்த தமிழக அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டபோதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதைச் சுட்டிக் காட்டி, அதனைத் தீவிரமாக எதிர்த்தும் மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைப்பிடிப்போம் என உறுதிபடத் தெரிவித்து 26.6.2019 அன்றே பிரதமரை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன். இரு மொழிக் கொள்கையையே தமிழக அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்பதைக் கடந்த ஆண்டு எனது சுந்தந்திர தின உரையிலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.

தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை இடம் பெற்று இருந்தாலும், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அதிமுக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது அந்தப் பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு அதிமுக அரசு என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதுபற்றி திமுக தலைவர் ஸ்டாலின், “புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி. மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

எழில்


கருத்துகள் இல்லை: