வியாழன், 4 ஜூன், 2020

நள்ளிரவு பூஜை, நரபலியான சிறுமி: புதையலுக்காக மகளையே கொன்ற தந்தை

நள்ளிரவு பூஜை, நரபலியான சிறுமி: புதையலுக்காக மகளையே கொன்ற தந்தைBBC : புதையல் கிடைக்க வேண்டும் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு 13 வயது மகளை தந்தையே நரபலி கொடுத்த சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.
முதல் மனைவி இந்திராவுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது மனைவி மூக்காயிக்கு இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த மே 18ஆம் தேதி பன்னீரின் முதல் மனைவியான இந்திராவின் இளைய மகள் வித்யா (13) அருகில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். வெகுநேரமாகியும் அவரைக் காணாததால் பெற்றோரும் உறவினர்களும் வித்யாவைத் தேடினர்.

சிறுமி கொலை செய்யப்பட்டது எப்படி?
அப்போது பாப்பான்குளம் அருகேயுள்ள தைல மரக்காட்டு பகுதியில் வித்யா ஆடைகள் கிழிந்த நிலையில், முகத்தில் காயத்துடன், கழுத்து இறுக்கப்பட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இரு மனைவிகளைக் கொண்ட பன்னீர் கட்டட வேலை செய்து வந்தார்.
இதனைக் கண்ட உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் சிறுமி வித்யாவை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மே19-ம் தேதி வித்யா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வகோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வித்யா, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதியானது.
காவல்துறை விசாரணையில் வித்யாவின் அப்பா பன்னீர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பன்னீரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் தானும் தனது இரண்டாவது மனைவியும் சேர்ந்து பணப் பிரச்சனையைத் தீர்க்க புதுக்கோட்டையை சேர்ந்த மந்திரவாதியான வசந்தியின் பேச்சை கேட்டு தனது மகளை நரபலி கொடுத்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து பன்னீரை கடந்த ஜீன் 01ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
மேலும், இவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமார் தெம்மாவூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். இந்த கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், சேலை, துண்டு மற்றும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.




கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமார்
பன்னீருக்கு ஆசை வார்த்தை காட்டி மகளை நரபலி கொடுக்க சொன்ன மந்திரவாதி வசந்தி மற்றும் உறவினர் முருகாயியை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று (04.06.2020) அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாவது மனைவி மர்ம மரணம்
இதனிடையே வித்யாவை நரபலி கொடுக்க உடந்தையாக இருந்த பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி வடுகவயலில் உள்ள தனது அம்மா வீட்டில் கடந்த மே 31 அன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். மூக்காயின் மரணம் குறித்தும், உடையாளிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விரிவாக பேசினார்.

“பன்னீர் தனது வறுமை மற்றும் பண ஆசை காரணமாக மந்திரவாதியான வசந்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அப்போது மந்திரவாதி ‘உன் மகளை நரபலி கொடுத்தால் உனக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும், புதையல் கிடைக்கும், செல்வாக்கு பெருகும்’ எனக் கூறியதால் அதனை நம்பி மகளை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.”
‘பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்’
“கடந்த மே மாதம் 17ம் தேதி நள்ளிரவு பிடாரி அம்மன் கோயில் அருகே பூஜை செய்துள்ளனர். மறுநாள் காலை 7 மணியளவில் பன்னீர் தனது இரு மகள்களிடம் பிடாரி அம்மன் கோயிலுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இளைய மகள் வித்யா ‘அக்கா நீ வர வேண்டாம் வீட்டில் இரு, நான் போய் தண்ணீர் எடுத்து விட்டு வருகிறேன்’ என சொல்லி விட்டு குடத்துடன் சென்றுள்ளார்.”
“சிறுமியை பின் தொடர்ந்து சென்ற பன்னீர், தனியாக பேச வேண்டும் என்று தைல மரக்காட்டின் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமி தண்ணீர் சுமக்க கொண்டு வந்த துண்டால் கழுத்தை நெரித்துள்ளார்.
அப்போது அந்த காட்டில் மறைந்திருந்த பன்னீரின் உறவினர் குமார், பன்னீர் இரண்டாவது மனைவி மூக்காயி, மந்திரவாதி வசந்தி, ஆகியோர் சிறுமியின் கை, கால்களை இறுக்கமாக பிடித்து மூச்சு திணற செய்துள்ளனர்.”



நள்ளிரவு பூஜை நடந்த பிடாரி அம்மன் கோயில் மற்றும் அதன் அருகே உள்ள குளம்
“சிறுமி உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் மூக்காயியை மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு மந்திரவாதி உள்ளிட்ட அனைவரையும் அனுப்பிவைத்துள்ளார் பன்னீர்.”
“பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க பாலியல் தொந்தரவால் நிகழ்ந்த சம்பவம் போல இருக்க வேண்டும் என்று நம்ப வைப்பதற்காக பன்னீர் தனது மகளின் ஆடைகளை களைந்து, உள்ளாடையைக் கழற்றி அப்பகுதியில் போலீசார், பொதுமக்களுக்கு கண்ணில் படும்படி வீசி எறிந்துவிட்டு மகள் இறந்து விட்டதாக நினைத்து ஒன்றும் நடக்காதது போல வீட்டிற்கு சென்றுவிட்டார்.”
“ஆனால், சிறுமி இறக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தததை கண்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.”



புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார்
“பன்னீர் நீண்ட நாட்களாக மிகவும் ஆழமாக திட்டமிட்டு இந்த கொலையை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் மகளை கொன்ற பதற்றம் சிறுதளவும் இல்லாமல் ஊர் மக்கள் சந்தேகப்படாத வகையில் இருந்துள்ளார். மகள் இறந்த அடுத்த நாள் பன்னீர் தினசரி செல்லும் இடங்களுக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் தான் கவலைப்படாததை போல் சகஜமாக பழகியுள்ளார்.”
‘மந்திரவாதிகள் மனநோயாளிகள்’
நரபலி சம்பவம் குறித்து சென்னையை சேர்ந்த மன நல மருத்துவர் சிவபாலன் பிபிசி தமிழிடம், “அந்த சிறுமியின் தந்தை யாரை பற்றியும் கவலைப்படாமல், தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் ஒரு சுய நலவாதியாகத் தான் இருந்திருப்பார், தனது பிரச்சனை சரியாக வேண்டும் என்பதற்காக பெற்ற குழந்தைகளை கூட கொலை செய்ய தயாராகியுள்ளார் என்றால் அவர் ஆளுமையற்றவர் என்பது தெரிய வருகிறது.
இவர் இந்த கொலையை நீண்ட நாட்களாய் திட்டமிட்டுத்தான் செய்து இருக்க வேண்டும்.”
“இப்படியான மன நிலையில் உள்ளவர்களை கண்டுபிடிப்பது சிரமம் ஆனால் அவர்களுடன் மிக நெருக்கமாக இருப்பவர்கள் மட்டும் இதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம்,” என்று கூறினார்.
மந்திரவாதி வசந்தி நிச்சயம் ஒரு மனநோயாளி காரணம் மூட நம்பிக்கையால் இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பி, ஒரு கட்டத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவராகவே மாறிவிடுகிறார்கள்.
மக்களின் மூட நம்பிக்கையை முதலாக்கி பேய், பூதம், புதையல் என மோசடி செய்துவரும் மந்திரவாதிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் மன நல மருத்துவர் சிவபாலன்

கருத்துகள் இல்லை: