வியாழன், 4 ஜூன், 2020

முள்ளிவாய்க்காலில் கிழக்கு மக்கள் அஞ்சலி செலுத்த தடை போட்ட வடக்கு ஆதிக்க வெறியர்கள்

Reginold Rgi : இந்த சம்பவத்தை சாதாரண ஒரு சம்பவமாக கடந்து செல்ல முடியாது. கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயமாகும்.
மட்டக்களப்பு அம்பாறையை சேர்ந்த முன்னாள் போராளிகள், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுமாக சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் நான்கு பஸ்களில் அஞ்சலி செலுத்துவதற்காக 17ஆம் திகதி புறப்பட்டு 18ஆம் திகதி காலையில் முள்ளிவாய்க்காலை சென்றடைந்தனர்.
இவர்கள் இம்முறைதான் முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்கள் அல்ல. கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு மே 18ஆம் திகதியும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று அங்கு ஒரு இடத்தில் அந்த மண்ணில் மடிந்த தங்கள் உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

கடந்த 18ஆம் திகதியும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று தாம் வழமையாக அஞ்சலி செலுத்தும் இடத்தை துப்பரவாக்கி தீபங்களை வைத்து அஞ்சலி செலுத்த முற்பட்ட போது கறுப்பு சட்டை அணிந்திருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என தம்மை அழைத்துக்கொண்ட ஒரு குழு அங்கு வந்து அஞ்சலி செலுத்த வந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். தீபங்களை காலால் எட்டி உதைத்து மட்டக்களப்பான் இங்கு அஞ்சலி செலுத்த முடியாது என உத்தரவிட்டனர் என அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பான், திருகோணமலையான், அம்பாறையான் யாரும் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த கூடாது, வீடியோ எடுக்க கூடாது, என கூறி வைக்கப்பட்ட தீபங்களை தூக்கி எறிந்தனர் என காரைதீவில் இருந்து சென்ற முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார். நடந்த சம்பவம் பற்றி காணொளி செய்தி ஒன்றையும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தனர்.
இப்பிரதேசத்திலிருந்து விடுதலைப்போராட்டத்திற்கு சென்று மாவீரர்களானவர்களையும் போராளிகளையும் கிழக்கு மக்களையும் அவமதிக்கும் வகையிலேயே யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை சேர்ந்த கறுப்பு சட்டைகாரர்கள் நடந்து கொண்டனர் என அந்த முள்ளாள் போராளி தெரிவித்திருந்தார்.
இந்த பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதுவரை பதிலளிக்கவில்லை. கடந்த 3 வருடங்களாக முள்ளிவாய்க்காலுக்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்த கிழக்கு மாகாண போராளிகளும் பொதுமக்களும் இம்முறை அஞ்சலி செலுத்த விடாது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தடுத்தார்கள் என பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருக்க மாட்டார்கள்.
தமது நேரத்தையும் பணத்தையும் செலவழித்து நான்கு பஸ்களில் 300 கிலோ மீற்றர் பயணம் செய்து முள்ளிவாய்க்காலுக்கு வந்த மக்களுக்கு மதிப்பளித்திருக்க வேண்டுமே ஒழிய அவர்களை புறந்தள்ளி அவமதிக்க வைத்து துரத்தி அடித்திருக்க கூடாது.
கிழக்கு மக்களை புறக்கணித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யார் நடத்துகிறார்களோ அவர்களுக்கு தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ இழப்புக்கள் பற்றியோ பேச அருகதை கிடையாது.
முள்ளிவாய்க்காலில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதனை தடுப்பதற்கு எந்த உரிமையோ யோக்கியதையோ யாருக்கும் கிடையாது. முள்ளாவாக்கால் நினைவேந்தலை யாரும் குத்தகை எடுக்க முடியாது. குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தும் குத்தகையை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமோ அல்லது வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனோ எடுக்க முடியாது நண்பர் ஒருவர் வழங்கிய தகவல் ....

கருத்துகள் இல்லை: