புதன், 3 ஜூன், 2020

கலைஞர் எங்கள் கட்டுமரம் ..

எந்த பக்கம் பார்த்தாலும் எந்த வெளிச்சமும் தெரியாத அந்த நாட்கள்..
உலகத்தின் கண்களில் தென்பட்டு விடாத இருளுக்குள் ஒழிந்து கொண்டிருந்த அந்த நாட்கள்.
எல்லா பக்கமும் இனவாதிகள் மூட்டிய தீக்குள் மெல்ல மெல்ல விழுங்கப்பட்டு கொண்டிருந்த அந்த நாட்கள்.
முட்டி மோதிக்கொண்டு வெடிக்க தொடங்கிய வேதனை மிகு நாட்கள்.
ஒரு பெரிய பெரும்பான்மை இனமும் முற்று முழுதாக அவர்களே ஆண்டு கொண்டிருந்த நாட்கள்
எப்படி பார்த்தாலும் எட்டி விட முடியாத ஒரு உயரத்திற்கு எட்டியே தீரவேண்டிய தீர்மானத்திற்கு எல்லோரும் வந்து விட்ட அந்த நாட்கள்.
அந்த சின்னிசிறு தீவுக்குள் வைத்தே வெறும் சிறுகதை போல முடிந்து விடுமோ என்று ஏங்கி கொண்ட்ருந்த அந்த நாட்கள் ...
இத்தனை சஞ்சலங்கள் எல்லாவற்றையும் போக்கும் வல்லமை கொண்ட ஒரு சத்தம் கடலை தாண்டி எங்கள் காதுகளை தடவ தொடங்கியது.
எமது எல்லா திசைகளும் கோபாலபுரத்தை மட்டுமே நோக்கி எட்டி பார்த்த அந்த நாட்கள் .
நாங்கள் நாதி அற்றவர்கள் அல்ல .. என்ற நம்பிக்கை ஒளியை எங்கள் பக்கம் வீசியது அந்த தென்னகத்து திராவிட கலங்கரை விளக்கம் .
எம்மால் எட்டவே முடியாது என்று ஏங்கிகொண்டு இருந்தவை எல்லாம் எம்மை நோக்கி வரத்தொடங்கியது ..

உப்புக்கரைசலில் போட்ட உப்பு கல்லை போல இந்திய மக்கள் கூட்டத்தில் ஒற்றை உப்பு கல்லாக ஈழம் என்ற கருத்தை ஒட்டி எல்லோரையும் அணிதிரள செய்தார் கோபால புரத்து கோமான் கலைஞர்.
அதுவரை இலங்கை தமிழர் என்றால் இந்தியாவில் இருந்து பஞ்சம் பிழைக்க போன்றவர்கள் பேசாமல் இருக்கவேண்டியதுதானே என திருவாய் மொழிந்தனர் பலர்
அரை வேக்காட்டு கருத்துக்கள் மட்டுமே உதிர்த்த வாய்கள் எல்லாம் கலைஞர் மடை திறந்து விட்ட ஈழம் என்ற காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி போயினர்.
எல்லாம் இனி சரியாகவே நடக்கும் என்று மக்கள் கருதி கொண்டிருந்த அந்த நாட்கள்.
நாட்டில் நல்லது நடந்து விடக்கூடாதே என்று சிந்திப்போர்கள் எல்லா நாடுகளிலும் உண்டு .
ஆனால் தமிழகத்திலும் ஈழத்திலும் மட்டும் அப்படி சிந்திக்கும் கயமை நெஞ்சினர் தொகை சற்று அதிகம்தான் .
ஈழப்போரட்டத்தை களவு கொள்ள வல்லூறுகள் காத்திருந்தன
தமிழகத்திலும் ஈழத்திலும் அந்த வல்லூறுகள கரம் கோத்து கொண்டன..
அதுவரை எனக்கு சிங்கள ரசிகர்களும் உண்டு என்ற ஒரு வல்லூறு ஈழத்தின் மேல் திடீர் பாசம் காட்டியது .
போராளிகள் எல்லாம் அரசியல் சமுக தேச விடுதலை என்று திட்டங்கள் தீட்டி கொண்டு மெதுவாக முன்னேறி கொண்டிருந்த வேளை ஈழ விடுதலை போரட்டதையே கடத்தி கொண்டுபோக ஈழத்து வல்லூறுகளும் பேராசை கொண்டன.
இருதேச வல்லூறுகளும் கை கோர்த்து அரங்கேற்றிய வெறியாட்டங்கள் முழு உலகையே அதிர செய்த அந்த அவல நாட்கள்.
அந்த நாட்களிலும் அதன் பின் வந்த நாட்களிலும் தமிழரின் நலம் ஒன்றே விரும்பி அதற்காகாவே ஆட்சிகளையும் இழந்தவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினர்.
சொல்வதற்கு ஏராளமான செய்திகள் உண்டு ..
கலைஞரின் இன்றய பிறந்த நாள் செய்தியாக ஒன்றை மட்டும் கூறி இந்த சிறு வரிகளை முடிவு செய்கிறேன்.
கலைஞர் சொல்லை தட்டாமல் அவர் வழி நடந்திருந்தால் இது வரை நடந்த அவலங்கள் பெரிதும் நடந்திருக்காது.
ஈழ தமிழர்கள் மிக பெரிய வரலாறு படைத்திருப்பார்கள் .
முழு உலகும் வியப்பினால் திரும்பி பார்க்கும் ஒரு தேசமாக அது எழுந்திருக்கும்.
கலைஞர் ஈழத்திற்காக எவ்வளவு பாடுபட்டார் எனபதை மன சாட்சி உள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.
வல்லூறுகளும் நரிகளும் சகுனிகளும் திருடர்களும் ஈழ போராட்டத்தை கடத்தி கொண்டுபோய் மக்களுக்கு அழிவை கொடுத்து தாங்கள் மட்டும் பணக்கார்கள் ஆகிவிட்டார்கள்
எங்கே தங்கள் அழுக்குகள் எல்லாம் உலகுக்கு தெரிந்து விடுமோ என்ற அவதியில் நேரத்துக்கு ஒரு பொய்யாக அள்ளி விடுகிறார்கள்.
காலம் எப்போதும் உண்மையைதான் பேசும்.
தென்கடலில் திக்கு தெரியாமல் தத்தளித்த ஈழத்தமிழர்களை கரையேற்ற வந்த கட்டுமரம்தான் எங்கள் கலைஞர்  ...  இப்படிக்கு ஈழதமிழர்கள்

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

👍👍👍

பெயரில்லா சொன்னது…

நண்பா சிறிய வேண்டுகோள் உங்களுடைய டெம்ப்ளேட் பிரவுசரில் தெரியவில்லை தயவுசெய்து சரி செய்யும்

பெயரில்லா சொன்னது…

இன்னும் அழகான பிரவுசரை இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்