திங்கள், 1 ஜூன், 2020

இந்திய மாணவர்களின் வெளிநாட்டு கனவை தகர்த்த கொரோனா வைரஸ்


BBC :உலகின் தலை சிறந்த வணிக கல்லூரியில் ஏம்.பி.ஏ படிக்க வேண்டுமென்ற ஆசைக்காக இரண்டு ஆண்டுக்கு முன்னாள் உழைக்கத் தொடங்கினார் 29 வயதான ரௌணக் சிங். 2020 ஜனவரியில் கலிஃபோர்னியாவில் இருக்கும் யூசி பெர்க்லி ஹாஸ் வணிக கல்லூரியில் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றார். பல்கலைக்கழகம் அவரது விண்ணப்பத்துக்கு வலு சேர்க்க சில தகவல்களைக் கேட்டிருந்தது.
"இதனால், ஐந்து வருடமாக பார்த்துக்கொண்டிருந்த நிலையான வேலையை விட்டுவிட்டு ஒரு புதிய மனநல நிறுவனத்தில் ஆலோசகராக வேலைக்கு சேர்ந்தேன்" என்கிறார் சிங்.
"புதிய வேலையில் என்னுடைய சம்பளம் குறைவு. ஆனால் இந்த முடிவை நான் பணத்திற்காக அல்லாமல் என்னுடைய அனுபவத்தில் இது ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் என்பதற்காகவே எடுத்தேன்" என கூறுகிறார் சிங்.
ஒரு வழியாக பெர்க்லி பல்கலைக்கழகத்தில் அவருக்கு சேர்க்கை அளிக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்திலிருந்து அவருடைய படிப்பு தொடங்க இருந்தது.
ஆனால் உலகத்தில் பெரிய மாற்றம் நடந்தது. கோவிட்-19 உலகத் தொற்று உடனடியாக நடக்க இருந்த இந்த எதிர்காலத்தையும் நிச்சயமற்றதாக மாற்றியது.

வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களில் ரௌணக் சிங்கும் ஒருவர். ஆனால் இப்போது சர்வதேச பயணக் கட்டுபாடு, இந்த புதிய சமூக இடைவெளி விதி மற்றும் அடுத்த சில மாதங்களில் வரப்போகும் மாற்றங்கள் ஆகியவை குறித்து ஒரு தெளிவு இல்லாமல் இந்த மாணவர்கள் உள்ளனர்.
சீனாவுக்கு பிறகு, இந்தியாவிலிருந்து அதிக மாணவர்கள் வெளிநாட்டிற்கு படிக்க செல்கின்றனர். 10 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கின்றனர் என 2019 ஜூலை மாதத்தில் இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மற்றும் ஜூலை மாதத்தில் மாணவர்கள் விசா மையத்தில் குவிந்து வெளிநாடு சென்று படிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த வருடம் அப்படியில்லை.
"மன அழுத்தம், குழப்பம், பதற்றம் என நிறைய மனநிலைகள் இருக்கின்றன. ஆனால் யாருக்கும் தெளிவு இல்லை" என்கிறார் பிரிட்டன் சென்று இதழியல் படிக்க விரும்பும் 23 வயதான மிகிகா பரூவா.
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு தங்களுடைய படிப்பை அடுத்த வருடம் அல்லது அடுத்த செமஸ்டருக்கு தள்ளி வைக்கலாம் என்ற ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. அதே சமயம் சில பல்கலைக்கழகங்கள் நிலமை சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டு வரை அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கிரீன்விச் பல்கலைக்கழகம் சில வகுப்புகள் ஆன்லைனிலும் சில வகுப்புகள் நேரிலும் நடக்கும் என அறிவித்துள்ளது. பிற நாட்டு மாணவர்களுக்கு அடுத்த செமஸ்டர் வரை வகுப்புகளை தள்ளி வைக்கலாம் எனவும் கிரீன்விச் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
"இவ்வாறு வகுப்புகள் தள்ளி வைக்கப்படுவது நியாயமாக தோன்றுகிறது. குறிப்பாக ஒன்றரை வருடம் போராடி இது போன்ற கல்லூரிகளில் சேர்கிறோம். அப்படியிருக்க ஆன்லைன் வகுப்புகள் நியாயமானதாக தோன்றவில்லை", என்கிறார் ரௌணக் சிங்.
இந்த ஆன்லைன் வகுப்புகளால் சிங் போல நிறைய பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது போன்ற பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்க விரும்புவதற்கு காரணம் பிற்காலத்தில் அங்கேயே வேலை பார்க்கலாம் என்பதும் அங்கிருக்கும் கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்து கொள்வதற்காகவும்தான் என்கிறார் பரூவா.
வெளிநாட்டிற்கு சென்று படிக்க இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு அதிகம் செலவாகும். காரணம் கட்டணம் அனைத்தும் அந்த அந்த நாட்டின் பணத்தில் கட்ட வேண்டும். தங்கள் சொந்த நாட்டின் பணத்தில் அல்ல. அது போக விண்ணப்பத்திற்கான கூடுதல் கட்டணம் மற்றும் சில பரிசோதனைகள் என அனைத்திற்கும் செலவாகும்.<>

கருத்துகள் இல்லை: