வியாழன், 4 ஜூன், 2020

ஜெ. அன்பழகன் உடல் நிலை கவலைக்கிடம்.. 80% செயற்கை சுவாசம்:

 80% செயற்கை சுவாசம்: ஜெ. அன்பழகன் உடல் நிலை கவலைக்கிடம்!மின்னம்பலம் : திமுக மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று சென்னை ரேலா மருத்துவ ஆய்வு நிலையம் அதிகாரபூர்வமாக இன்று (ஜூன் 4) தகவல் வெளியிட்டிருக்கிறது.
“61 வயதான தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் ஜூன் 2 ஆம் தேதி சென்னையிலுள்ள டாக்டர் ரேலா மருத்துவ ஆய்வு மையத்தின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுவாசப் பிரச்சினைகளோடு வந்தார். அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் பாசிட்டிவ் என்று முடிவு வந்தது.
ஆரம்பத்தில் அன்பழகனுக்கு ஃபேஸ்மாஸ்க் மூலம் ஆக்சிஜன் தெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. நேரம் செல்லச் செல்ல அவரது சுவாசிக்கும் ஆற்றல் மோசமடைந்ததால், செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது.

இப்போது ஜெ. அன்பழகனுக்கு 80% ஆக்சிஜன் வென்டிலேட்டர் மூலமாகவே அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல் நிலையில் கடந்த 24 மணி நேரமாக எந்த மாற்றமும் இல்லை” என்று ரேலா மருத்துவ ஆய்வு மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜெ. அன்பழகனின் உடல் நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை, ரேலா மருத்துவமனை மருத்துவர்களுடன் பேசினார், அன்பழகனின் சிகிச்சைக்காக அரசு எவ்வித உதவியும் வழங்கத் தயாராக இருக்கிறது என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், ஜூன் 2 ஆம் தேதி இரவு ரேலா மருத்துவமனையில் அட்மிட் ஆன அன்பழகனின் சுவாசம் 80% வென்டிலேட்டர் மூலமாகவே கிடைக்கிறது என்று மருத்துவமனையின் அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திமுக தலைவர், சக மாவட்டச் செயலாளர்கள், சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: