செவ்வாய், 2 ஜூன், 2020

பொதுச் செயலாளர் பதவி.. . துரைமுருகனுக்கு ஷாக்!

டிஜிட்டல் திண்ணை: பொதுச் செயலாளர் பதவி... துரைமுருகனுக்கு  ஷாக்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“கொரோனா மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏகப்பட்ட நெருக்கடிகளைத் தருகிறது என்றால் அரசியல் கட்சிகளுக்குள்ளும் பல்வேறு குழப்பங்களை உண்டாக்கி வருகிறது. திமுகவில் ஏற்கனவே நிறைய குழப்பங்கள் இருக்க, கொரோனா ஊரடங்கு மேலும் சில முக்கிய குழப்பங்களுக்கு வித்திட்டிருக்கிறது.
திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகன் அக்கட்சியின் பொதுச் செயலாளராகப்பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையில்தான்... ஊரடங்கால் பொதுக்குழு தள்ளிக்கொண்டே போகிறது. இந்த நிலையில்தான் துரைமுருகனுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தலைமை முடிவாக எடுத்திருக்கிறது என்கிறார்கள்.

மே 16ஆம் தேதி திமுகவின் மாசெக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அன்று வெளிவந்த டிஜிட்டல் திண்ணையில் துரைமுருகன் பற்றி சற்று விளக்கியிருந்தோம்.
‘திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவையடுத்து, புதிய பொதுச் செயலாளர் தேர்வுக்காக மார்ச் 29ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சீனியாரிட்டிபடி பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பேச்சுகள் எழுந்த நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட தனது பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்தார். இதை ஏற்றுக்கொண்டதாக ஸ்டாலினும் அறிவித்தார். இதையடுத்து துரைமுருகன் பொதுச் செயலாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. அதேநேரம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதால் அனைத்துக் கட்சிகளின் நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டதுபோல திமுக பொதுக்குழுவும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அலுவலக ரீதியாக துரைமுருகன் பொருளாளர் பதவியில் இருந்து விலகிவிட்டார். அதேநேரம் இன்னும் பொதுச் செயலாளராகவும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதற்கிடையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால்... பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்து திமுகவின் சட்டத்தில் ஒரு திருத்தம் தலைவரின் பிரத்யேக அதிகாரத்தால் கொண்டு வரப்பட்டது. அதாவது பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க 120 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நான்கு மாத காலமாகும். இது திமுகவின் நிர்வாக நடவடிக்கை என்றாலும் துரைமுருகனைச் சுற்றியுள்ளவர்கள் இதை வேறு மாதிரி நினைக்கிறார்கள். ஏலகிரியில் ஓய்வெடுத்து வரும் துரைமுருகனே, ’இவங்க சொல்ற சமூக இடைவெளியெல்லாம் பின்பற்றி ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கலந்துக்குற பொதுக்குழு நடத்தணும்னா இன்னும் எத்தனை மாசம் ஆகும்னு தெரியலையே. பேசாம பொதுக்குழுவையும் காணொலி காட்சியில நடத்தி முடிக்க வேண்டியதுதானா?’ என்று கேட்டிருக்கிறார். துரைமுருகனின் இந்த ஃபீலிங்கைதான் பொதுக்குழுவைக் காணொலியில் நடத்த முடியாதா துரைமுருகன் ஆதங்கம் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணையில் வெளியானது,
கை முன்னே நின்றாடும் பொதுச் செயலாளர் பதவி தன் கைக்குள் வரவில்லையே என்ற ஆதங்கத்தில் துரைமுருகன் இருக்கும் நேரத்தில்தான் அவருக்கு அதிர்ச்சி தரும் முடிவொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் ஸ்டாலின் வீட்டில் நடந்த ஆலோசனையில், ‘கொரோனா எஃபெக்ட் இன்னும் நான்கைந்து மாதங்களுக்கும் மேலாகவே நீடிக்கும். எனவே கட்சி அமைப்புத் தேர்தலில் கவனம் செலுத்தாமல், அடுத்த பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவோம். திமுக ஆளுங்கட்சியாகிவிட்டால் கட்சிகளில் பல மாற்றங்களை எளிதாகச் செய்யலாம். எனவே அமைப்புத் தேர்தலை பொதுத் தேர்தலுக்குப் பின் வைத்துக் கொள்ளலாம். பொதுச் செயலாளருக்குரிய அதிகாரங்கள் தலைவருக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில் பொதுச் செயலாளர் தேர்தலைப் பிறகு வைத்துக்கொள்வதில் தவறில்லை’ என்றொரு விஷயம் பேசப்பட்டிருக்கிறது.
அதாவது துரைமுருகன் பொருளாளராகவே தொடரட்டும். பொதுச் செயலாளரைச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கலாம் என்பதே இந்த பொலிட் பீரோவின் முடிவு. இது துரைமுருகனுக்குத் தெரியவர கடுமையான அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்கள். துரைமுருகனை சிலர் சந்தித்து இதுபற்றி பேசியிருப்பதாகவும் தகவல். ‘தான் பொதுச் செயலாளர் பதவிக்கு வரக் கூடாது என்று சிலர் திட்டமிட்டுக் காய் நகர்த்துவதை உணர்ந்த துரைமுருகன், சில நாட்களாகவே தலைமையில் இருந்து தன்னுடன் பேசுபவர்களிடம், ‘நான் என்ன பொருளாளரா, இல்ல பொதுச் செயலாளரா... சாதாரண உறுப்பினர் தானப்பா. என்னால என்ன செய்ய முடியும்’ என்று குத்தலாகப் பொடிவைத்துச் சொல்கிறார் என்கிறார்கள். துரைமுருகனின் அதிருப்தி என்றேனும் வெடிக்கலாம் என்ற எச்சரிக்கைத் தகவல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் சில சீனியர்கள் மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ்அப்

கருத்துகள் இல்லை: