சனி, 7 செப்டம்பர், 2019

ரணில் விக்கிரமசிங்கா ஆளும் ஐ தே கவின் ஜனாதிபதி வேட்பாளர் !

vanakkamlondon.com : ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில்
விக்ரமசிங்க இன்று அறிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று முற்பகல், ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.இவர்களைத் தவிர அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் ‘ வேட்பாளராக போட்டியிட எவரும் முட்டி மோதிக் கொள்ள அவசியமில்லை.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். போட்டியிட்டு நான் வெற்றி பெற்று காட்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை அடுத்து, சஜித் அணியை சேர்ந்த மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் உடனடியாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.அது எப்படி? நாங்கள் குருணாகலில் நேற்றும் ஒரு கூட்டத்தை நடத்தினோம். பெருந்தொகையான மக்கள் வந்திருந்தனர். மக்கள் அவரையே கோருகின்றனர். இதனால், இது அநீதியானது’ என இருவரும் சஜித் பிரேமதாச சார்பில் கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் ‘கூட்டங்களுக்கு மக்கள் வருவார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு எப்படியும் மக்கள் வருவார்கள். அடுத்த வாரத்தில் இருந்து, நானும் கூட்டங்களை நடத்த ஆரம்பிக்க போகின்றேன்.அந்தக் கூட்டங்களுக்கு இதனை விட கூட்டத்தை வரவழைத்து காட்டுகிறேன்.
கட்சியின் ஐக்கியத்தை பாதுகாப்பதே அடிப்படையானது.தனிநபர்களை உயர்த்தி பிடிக்க வேண்டாம். கட்சியை குழுக்களாக பிரிக்க வேண்டாம். இது எமது வெற்றிக்கு தடையாக இருக்கும்.இவற்றை தீர்க்க முடியாது என்றால், நானே போட்டியிட நேரிடும். நான் போட்டியிடுவேன். எவருடனும் போட்டியிட தயார். நான் வெற்றி பெறுவேன்’. எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: