திங்கள், 2 செப்டம்பர், 2019

BBC : இந்தியாவின் வாகன உற்பத்தித்துறையில் கடும் வீழ்ச்சி - காரணம் என்ன?


இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு இளம் தம்பதியினர் , வாரஇறுதி வரைக்கும் சாப்பிட அவர்களுக்கு போதுமான அரிசி இருக்கிறதா என்பது குறித்து ஆலோச்சித்து கொண்டிருந்தார்கள். ஒரு சிறு குடிசை வீட்டில் இருந்து வெளியே எட்டிப் பார்த்த மனைவி, "நீங்கள் தவறான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். இங்கு சுற்றி காலியாக இருக்கும் தொழிற்சாலைகளை சென்று பாருங்கள்" என்று கூறினார்.
அவரது கணவர் ராம் மார்தியின் ஊதியத்தில்தான் அவரது குடும்பம் வாழ்கிறது. தற்போது கடினமான சூழல் நிலவுவதாக அவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
"இதற்கு முன்பு எங்கள் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. தற்போது சாப்பாட்டிற்கே கஷ்டப்படுகிறோம். என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதைக்கூட நிறுத்திவிட்டேன். என் தாய்க்கு உடல்நலம் சரியில்லை. ஒரு நாள் எனக்கும் ஏதாவது ஆகிவிட்டால் என் குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வார்கள்?" என்று ராம் கேட்கிறார்.

ஜாம்ஷெட்பூரில் உள்ள கார் மற்றும் கனரக வாகனங்களுக்காக உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில்தான் ராம் பணிபுரிகிறார்.
>ஆனால், கடந்த மாதத்தில் 14 நாட்கள் மட்டுமே வேலை செய்திருக்கிறார். பொருட்களுக்கான தேவை குறைந்துவிட்டதாக, கடந்த சில வாரங்களாக பல நாட்கள் அந்நிறுவனம் மூடப்பட்டது. பொருளாதார மந்தநிலையை குறிக்கும் வகையில், இந்தியா முழுவதும் நுகர்வோர் தேவை கணிசமாக பலவீனம் அடைந்துள்ளது.
மேலும், இந்தியாவில் கார் தொழில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தியை நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. பலரும் வேலை இழந்துள்ளனர்.
கடந்த ஜூலையில், பயணிகள் வாகனங்களின் விற்பனை 30 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. இதுவே கடந்த இரு தசாப்தங்களில் நிகழ்ந்த மோசமான சரிவு.
>வங்கித்துறையில் நிலவும் நெருக்கடி காரணமாக, ஆட்டோ டீலர்கள் மற்றும் கார் வாங்கும் திறன் கொண்டவர்கள், கடன் வாங்குதற்கு சிரமப்படுகிறார்கள்.
பெரிய உற்பத்தியாளர்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள்தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பொறியாளராக இருந்த சமீர் சிங், தற்போது தனது சொந்த ஊரான ஜாம்ஷெட்பூருக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததும், அவர்கள் குடும்பம் நடத்தும் ஆட்டோவிற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நலிவடைந்ததும்தான் இதற்கு காரணம்.
"நான் என் தொழிலை நடத்த இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை" என்று அவர் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "தொழிலை தொடர்ந்து நடத்த, பணம் வேண்டும். மேலும் ஒரு நிறுவனத்தை நடத்த, மனவலிமை வேண்டும். என் மாதிரி சிறு தொழில் உரிமையாளர்கள், சேமிப்பு கடன் தொகை என்ற அனைத்து பணத்தையும் தொழிலில் போட்டுள்ளோம். நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். என் நிறுவன வேலையாட்கள் கடந்த சில வாரங்களாக வேலை இல்லாமல் இருக்கிறார்கள். எனக்கு அவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. நிலைமை இப்படியே இருந்தால், அவர்கள் வேறு வேலையை தேடிச் சென்றுவிடுவார்கள். ஆனால், நான் இன்னொரு வேலையைக்கூட தேடிக் கொள்ள முடியாது. என் வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் இங்குதான்" என்கிறார்.
இந்திய வாகன உற்பத்தித்துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய சரிவு கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட மோசமான சரிவாகும். இத்துறையில் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ 35 மில்லியன் பேர் பணிபுரிகிறார்கள். இந்த அளவை வைத்தே இந்த சரிவின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை அளவிட முடியும்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் வேலை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொழில்துறை நகரமான ஜாம்ஷெட்பூரில், இந்த மந்தநிலையால் ஏற்பட்ட விளைவுகளை மக்களிடையே உள்ள துன்பத்தில் காண முடிகிறது.
>அங்கு வேலை செய்வதற்காக, ஒவ்வொரு நாளும் தினமும் காலை நூற்றுக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் அப்பகுதியில் ஒன்றுகூட, உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
ஆனால், நான் பார்த்த இம்லி சௌக், அதற்கு நேர்மாறாக இருந்தது. வெவ்வேறு வயதுடைய ஆண்களும், பெண்களும், தங்களுக்கு இன்று வேலை இருக்குமோ இல்லையோ என்ற கவலையோடும் பதற்றத்தோடும் அங்கு காத்திருந்தனர். சிலர் எங்களை பார்த்து நாங்கள் ஒப்பந்தக்காரர்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டனர்.
மூன்று குழந்தைகளுக்கு தாயான லஷ்மி, இங்கு பணிக்காக 15 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாக அவருக்கு தொடர்ச்சியாக வேலை இல்லாமல் இருக்கிறது.
"ஒவ்வொரு நாளும் இந்த நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே தினக்கூலி வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வேலையில்லாமல் திரும்புகிறோம். திரும்பிவர பேருந்துக்குக்கூட பலரிடம் காசு இருக்காது. அதனால் பல நாட்கள், நாங்கள் நடந்தே வீடு திரும்புவோம். ஒரு நாளைக்கு 400 - 500 ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்தோம். ஆனால், தற்போது அப்படி இல்லை. இப்போது 100 - 150 ரூபாய்க்குகூட எந்த வேலையும் செய்ய தயாராக இருக்கிறோம். கழிவறை சுத்தம் செய்வது அல்லது, வீதிகளை சுத்தம் செய்வது. எதுவாக இருந்தாலும் சரி. ஆனால், தற்போது அந்த வேலை கூட கிடப்பதில்லை" என்று அவர் கூறுகிறார்.
ஒட்டுமொத்தமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருப்பது, வாகன உற்பத்தித்துறைக்கு நற்செய்தியாக இருக்க முடியாது. இன்னும் பலர் வேலையிழக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளரும், தானியாங்கி உபகரணங்கள் உற்பத்தியாளர் சங்கம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளருமான சஞ்சய் சபர்வாலை நான் சந்தித்தேன்.
"இந்தாண்டு ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைவு மிகப்பெரியது. இது இரு சக்கர வாகனங்கள், கார்கள், வணிக வாகனங்கள் என ஒவ்வொரு பொருளின் உற்பத்தியையும் பாதித்துள்ளது. இதற்கு முன் இந்தளவுக்கு சரிவு ஏற்பட்டதில்லை. தற்போது, ஒட்டுமொத்தமாக எல்லாம் வீழ்ந்துவிட்டது" என்று அவர் கூறினார்.
இந்த தொழிற்சாலைகளை நம்பி, ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஆனால், வருங்காலத்தில் இன்னும் நிறைய கெட்ட செய்திகளே அவர்களுக்கு காத்திருக்கின்றன.
வாகன பாகங்களை தயாரிக்கும் தொழில் செய்து இரண்டு நிறுவனங்களை நடத்தி வருபவர் ருபேஷ் கட்ரியர். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் ஒரே ஒரு வாரம் மட்டுமே இவரது தொழிற்சாலைகள் இயங்கின.
யாருமே இல்லாத அவரது தொழிற்சாலைக்குள் அமர்ந்திருந்த ருபேஷ் கூறுகையில், "திடீரென சந்தை மோசமாகியதுதான் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் கனரக வாகணங்களின் விற்பனை குறைந்ததை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பைக்குகள் போன்ற பயணிகள் வாகனங்களுக்கு என்ன ஆனது? அவை விலை அதிகமானது கூட இல்லை" என்று கூறினார்.
வாகன உற்பத்தித்துறையை மீட்டெடுக்க, வரிக்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் டீல்ரகள் மற்றும் நுகர்வோர்களுக்கு நிதியளிப்பதற்கு எளிதாக அணுகுமுறை வேண்டும் என்றும் இத்துறை நிர்வாகிகள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
re>இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, இந்திய அரசாங்கம் சமீபத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் வாகன உற்பத்தித்துறையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கையாள்வது குறித்தும் கூறப்பட்டது. பொதுத்துறை வங்கிகளுக்கு, 70ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி, அவர்கள் குறைந்த வட்டியில் வீட்டு மற்றும் வாகன கடன் வழங்க தூண்டுவதே அத்திட்டம்.
ஆனால், இது தற்போதைய சூழலுக்கு பதிலாக அமையுமா என்ற கேள்வி எழுகிறது.
பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை வாகன உற்பத்தித்துறையின் செயல்திறனை வைத்தே பெரும்பாலும் கணக்கிடுவார்கள்.
ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சி, மிகுந்த கவலையை எழுப்பியுள்ளது

கருத்துகள் இல்லை: