ஞாயிறு, 5 மே, 2019

ராஜிவ் காந்தி ஊழலில் நம்பர் 1: மோடி

மின்னம்பலம் : ராஜிவ் காந்தி ஊழலில் நம்பர் 1: மோடிஉத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “எனக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளார் ராகுல் காந்தி. ராஜிவ் காந்தி ஊழலற்ற தூய்மையானவர் என்று அவரது அமைச்சர்கள் கூறிவந்தனர். ஆனால் அவரது வாழ்க்கையோ ஊழலில் முதலிடத்துடன் முடிவடைந்தது” என்று பேசினார். போஃபர்ஸ் ஒப்பந்த விவகாரம் குறித்து மோடி இவ்வாறு பேசினார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடிஜி, போர் முடிந்துவிட்டது. உங்களது கர்மவினைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. என் தந்தை குறித்து நீங்கள் கொண்டுள்ள கருத்துகள் உங்களை பாதுகாக்காது” என்று பதிலளித்துள்ளார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறவே ஆதாரமற்றவை என்று டெல்லி உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?
இந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அன்றைய பாஜக அரசு முடிவெடுத்தது திரு மோடி அவர்களுக்குத் தெரியாதா? இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது என்ற முதுமொழி பிரதமர் மோடிக்குத் தெரியாதா? தேர்தலில் தம்முடைய கட்சியின் தோல்வி உறுதி என்ற அச்சம் திரு மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: