வியாழன், 4 அக்டோபர், 2018

சிறுமி பாலியல் கொலை மூவருக்கு தூக்கு!

சிறுமி பாலியல் வழக்கில் தூக்கு!மின்னம்பலம் :"சிறுமி பாலியல் வழக்கில் தூக்கு!"
தேனி மாவட்டத்தில் 10 வயதுச் சிறுமியை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (அக்டோபர் 4) தேனி மகளிர் நீதிமன்றம் குற்றவாளிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி காணாமல் போனார். பின்னர், அவரது உடல் அங்குள்ள ஒரு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலையானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில், சந்தேகத்தின் பேரில் அந்த ஊரைச் சேர்ந்த சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஊர் மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த 4 ஆண்டுகளாக, மூவரும் மதுரை மத்தியச் சிறையில் இருந்து வந்தனர்.
சிறுமி பாலியல் வழக்கு விசாரணையானது தேனி மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிறையில் இருந்துவரும் சுந்தர்ராஜ், ரூபின் மற்றும் குமரேசன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி திலகம்.
ஒவ்வொரு குற்றத்துக்கும் தனித்தனியே தண்டனையை அறிவித்தார். வல்லுறவு செய்த குற்றத்துக்காக, மூவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார். சிறுமியை வல்லுறவு செய்து கொன்ற குற்றத்துக்காக, மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்ததோடு, அரசு சார்பாக உயிரிழந்த சிறுமியின் தாயாருக்குக் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தேனி

கருத்துகள் இல்லை: