செவ்வாய், 2 அக்டோபர், 2018

சினிமா விமர்சனம் செய்ய தகுதி வேண்டுமா? சினிமா பார்க்க தகுதி வேண்டுமா? ஷாலின் மரியா லாரன்ஸ்


விமர்சனங்கள் ... அதிகமானோர் சினிமா பார்ப்பதில்லை என்கிற விமர்சனம்
இருக்கிறது ஆனால் ஒரு திரைப்படம் வெளியானதும் இங்கே முகநூலில் பல ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் முளைக்கின்றன. எல்லோரும் படம் பார்த்து விமர்சனம் செய்கிறார்கள்.அப்பொழுது படம் பார்க்காதவர்கள் யார் என்கிற பெருத்த கேள்வியும் எழுகிறது.
சரி விமர்சனத்திற்கு வருவோம்.
சுஹாசினி மணிரத்னம் அக்கா சொன்னதுபோல் தகுதியானவர்கள் தான் விமர்சனம் செய்யவேண்டும் என்பது ஒரு ரசிகனின் அடிப்படை உரிமையை பறிப்பது போலாகும்.நீ படம் தகுதி இருப்பவனுக்கு மட்டும் எடுகின்றாயா? எல்லோருக்கும் தானே எடுக்கிறாய்? அப்பொழுது விமர்சனம் என்பது எல்லோருமே செய்யலாமே?அது தானே ஜனநாயகம்?
ஆனால் இதையெல்லாம் மீறி ,ஒரு வரி விமர்சனம் ,பிட்டு விமர்சனம் ,ராஜசங்கீதனின் 46 மீட்டர் விமர்சனம் ,ஒரு பக்க விமர்சனம் ,புகைப்பட விமர்சனம் ,கூட்டு விமர்சனம், கதைசொல்லி விமர்சனம் என்று பல விதமான விமர்சனங்கள் வெளிவரதான் செய்கின்ற .அப்படி வரும் சில விமர்சனங்களை பற்றிய ஒரு சிறு பார்வை.
ஆனந்தம் பட வடிவ விமர்சனம்.
இந்த விமர்சனத்தை யார் எழுதுவார்கள் என்றால் அந்த இயக்குனரோடு பல காலமாய் நட்பில் இருப்பவர்கள். அவர்களின் ரத்தத்தின் ரத்தமாய் ,விருகம்பாக்க டீக்கடையின் டீயாய் பழகியவர்கள் .அவர்களோடு பீடி பிடித்து "தமிழ் சினிமாவ நாம தான் மாத்தணும் ப்ரோ " என்று வடபழனி மேன்ஷனில் இரவு 3 மணிக்கு பிராந்தி அடித்துக்கொண்டே சபதம் செய்தவர்கள் மற்றும் இலக்கிய இலக்கியக்கூட்டங்களில் பரிச்சய பட்டவர்கள்.

இவர்கள் விமர்சனம் 100 % வெறும் புகழ்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் படம் பார்ப்பதற்கு முன்னேயே .
குறிப்பாக இவர்களை அடையாளம் காண வேண்டுமென்றால் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை பார்த்தாலே போதும் "உங்களை ஆள வருகிறது " "உங்களை புரட்டிப்போட்ட வருகிறது " என்று அதிகமாக துவங்கும் .நாமளும் இதை படித்துவிட்டு நரம்புகள் புடைக்க வெறியாக வெயிட் செய்வோம் .
இவர்கள் இயக்குனரின் நண்பர்கள் என்பதால் பெரும்பாலானோர் பிரிவியூ ஷோ பார்த்து இருப்பார்கள் .என்ன சிலாவலித்தனம் செய்வார்கள் என்றால் ,படம் வெளியாக சில தினங்கள் இருக்கும்போதே படத்தின் முழு கதையை எழுதுவது.
படம் வந்த பிறகு "சின்ராச கையிலேயே புடிக்க முடியாது " எனும் கணக்காக ஒரு நாளைக்கு குறைந்தது பத்து போஸ்ட் படத்தை பற்றி .அதிலும் குறிப்பாக இயக்குனரோடு எடுத்த புகைப்படத்தை இணைத்தே ஆகவேண்டும் .பின்பு எவனாவது தப்பி தவறி படத்தில் ஒன்று இரண்டு குறைகள் சொல்லிவிட்டால் "உனக்கு தெரியுமா சினிமா எடுக்க ? உனக்கு அவர் மேல தனிமனித வன்மம் ...எரியுதா எரியூட்டும் எரியூட்டும் " போன்ற வசைமொழிகள் தூவப்படும் .பின்பு ஒரு கும்பலாக கூடிக்கொண்டு அவர்களுக்கே புரியாத மாதிரி சர்க்காச காமெடி பண்ணுவது .
இவர்களின் முக்கிய வசனங்கள் "உலகத்தரத்தில் ஒரு தமிழ் சினிமா " "குறிஞ்சி மலர் " பேரன்புக்காரனின் காவியம் " "இந்த படம் உங்களை அழ வைக்கும் ,ஓட வைக்கும் " etc .
சரக்கு உந்து சைடிஷ் எனது விமர்சனம் .
குறிப்பாக சினிமா துறையில் போராடி கொண்டிருக்கும் உதவி இயக்குனர்கள் ,ஒளிப்பதிவாளர்கள் இவர்களுடைய விமர்சனம் .
எந்த படமும் இவர்களுக்கு பிடிக்காமல் போகாது .எல்லா படமும் ஆஸ்கார் படம்தான் .அதிலும் பெரிய இயக்குனர்கள் படம் என்றால் அது நிச்சயம் திரைக்காவியம்தான் .
இவர்களை கண்டுபிடிக்க "பொலன்ஸ்கியின் ஒளி வடிவம் போல் உள்ளது " "அந்த பிரேமில் காட்சி பேழை தன்னை புக்தி கொண்டிருந்தது " " அந்த ஆங்கிள்,இந்த லயிட்டிங் " " கேமரா தன முகத்தை திருப்பி பார்க்குமிடத்தில் கதாநாயகன் பாதி இருட்டில் நின்று " இபப்டியெல்லாம் இருந்தால் இவர்கள்தான் .
அதிகமாக பாலுமகேந்திரா படம் ,வீடு அர்ச்சனா படம் ,ஊட்டியில் ஒரு மலை ,நாடு ரோட்டில் நிறுத்திவைக்கப்பட்ட ராயல் என்பீல்ட் பைக் ,வூடிஆலன் படம் முகப்பாய் வைத்திருப்பார்கள் .
கதைசொல்லும் பெருமாள்கள்
ஒருவிதமான மனநோய் இது .இயக்குனர் நாசமாய் போனாலும் பரவாயில்லை என்று படம் ,screenplay ,வசனம் ,ஹீரோயின் டிரஸ் ,படத்தின் முக்கிய திருப்புமுனை காட்சிகள் என்று எல்லாவற்றையும் இங்கேயே எழுதி தொலைக்க வேண்டும் .
அதிலும் இப்பொழுதெல்லாம் ஒரு படி மேலே போய் படத்தின் காட்சிகளை திரையரங்கில் இருந்து போட்டோ எடுத்து போடுபவர்கள் .
"ஹீரோ இண்டெர்வலுக்கு அப்புறம் செத்துருவான் ப்ரோ " என்று டிக்கெட் வாங்கும்போது பின்னால் இருந்து பேசும் நான்சென்ஸ் நாறவாய் நாராயணங்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை .
கடத்தி சொல்லியே ஆர்கஸம் அடையும் பேர்வழிகள் .
டேய் உங்கள எல்லாம் யாரடா விமர்சனம் எழுத சொன்னது
?!!!!!!!
இலக்கியா சொந்தக்காரர்கள் விமர்சனம்
இவர்கள் பெரும்பாலும் எழுத்தாளர்கள் .பலர் சிவாஜி ரசிகர்களாக இருப்பார்கள் .அதே பாதிப்பில் கொஞ்சம் மிகைப்படுத்திய விமர்சனம் தான் கைவரும் .மிகைப்படுத்திய பாராட்டு ,இல்லையென்றால் மிகைப்படுத்திய நேர்மறை விமர்சனம் .இவர்களுக்குள் பேலன்ஸ் என்பது பெரும்பாடு .
மெக்காலே பாய்ஸ்
தமிழ் படத்தின் விமர்சனம் ஆங்கிலத்தில் தான் எப்பொழும் இருக்கும் .அது போகும் போக்கை பார்த்தால் அது சினிமா விமர்சனமா இல்லை அன்று படித்த எகனாமிக் டைம்சின் தலைப்பு செய்திகளை எழுதி இருக்கிறார்களா என்கிற சந்தேகம் வந்துவிடும் .எளிய ஆங்கிலமே வராது .எழுதினால் பிரிட்டிஷ் இங்கிலீஷ்தான் ,அதுவும் அவர்களே மறந்துபோன 18 ஆம் நூற்றாண்டின் வார்த்தைகளை பரவலாக தூவி ,பிரெஞ்சு இலக்கியத்தில் இருந்து நான்கு வரிகளை அதில் சிதறவிட்டு அதை படிக்கும் வடநாட்டவன் தமிழ் படம் என்றாலே ஏதோ இந்தியாவுக்கு சம்பந்தம் இல்லாத ஏதோ இன்டலெக்சுவல் புடுங்கள் போல என்று நினைத்து ஓடி விடுகிறான் .
குறியீடு கன்னிகள்
இயக்குனரே யோசிக்காத விஷயங்களை படத்தில் இருந்து தோண்டி எடுத்து அதனைப்பற்றி நெடுங்கட்டுரைங்கள் எழுதுவார்கள் .விமர்சன கூட்டங்களில் அவர்கள் குறியீடுகளை சிலாகித்து பேச ,இயக்குனர் அவர்கள் புரிந்த மாதிரியே சிரிக்க ...இதை இல்லை என்று சொன்னாலும் "குறியீடு தெரியாதவன் பொண்டாட்டி எல்லாம் பத்தினி இல்லை " என்கிற ரேஞ்சில் சுத்துவார்கள் .
சிங்கில்துவா சங்கிகள்
படத்தில் வரும் காதல் காட்சிகளை மட்டும் எடுத்து வரி வரியா எழுதுபவர்கள் .படத்தில் வரும் ஏதாவது ஒரு பெண்ணை பிடித்துக்கொண்டு "தேவதைகளை அவள் வடிவத்தில் பார்க்கிறேன் " "அவள் ஒரு யட்சி " "நான் அவள் யாசகம் " என்று பரிதாபமாக இரவு 2 மணிக்கு எழுதிக்கொண்டிருப்பார்கள் .
பி கு : இது மிகவும் பொதுவானது ,எந்த படத்தையும் குறிப்பிடவில்லை .ரசிக கன்னிகள் மாற்று பாதையில் செல்லவும்

கருத்துகள் இல்லை: