புதன், 3 அக்டோபர், 2018

சென்னை ஏசியில் கசிந்த வாயுவால் மூவர் உயிரிழப்பு .. ஒரே குடும்பத்தை சேர்ந்தவரக்ள்

THE HINDU TAMIL : சென்னை கோயம்பேட்டில் நேற்று பின்னிரவு ஏற்பட்ட மின்தடை காரணமாக ஏசி இயந்திரத்திலிருந்து வெளியான வாயுவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
சென்னை கோயம்பேடு அருகே உள்ள மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்.  தனியார் பீட்ஸா நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி கலையரசி மற்றும் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது மகன். மூவரும் இரவு உறங்கிய பிறகு திடீரென மின்சாரம் நின்றுபோனது.
இதனால் வீட்டில் உள்ள மினி ஜெனரேட்டரை ஆன் செய்துவிட்டு மீண்டும் உறங்கத் தொடங்கினர். மீண்டும் மின்சாரம் வந்தபோது ஜெனரேட்டர் அணைக்கப்பட வேண்டும். ஆனால் மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் மீண்டும் மின்சாரம் வந்ததை அவர்கள் அறியவில்லை.
இதனால் இயங்கிக்கொண்டிருந்த ஜெனரேட்டரும் மின்சாரம் வந்தபிறகும் தொடர்ந்து நிறுத்தப்படாமல் இருந்ததால் திடீரென ஏற்பட்ட மின் அழுத்தத்தால் ஏசி இயந்திரத்திலிருந்து கார்பன் மோனாக்சைடு என்ற வாயு கசிந்துள்ளது.

இவ்வாயு அறை முழுவதும் நிரம்பியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் தூக்கத்தில் இருந்த நிலையிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
விடிந்தபிறகும் வீடு திறக்கப்படாமல் இருந்ததை அறிந்த அருகில் வசித்துவந்த இவர்களது உறவினர்கள் கதவைத் தட்டியுள்ளனர். கதவு திறக்கப்படாததால், சரி தூங்குகிறார்கள் போலிருக்கிறது என விட்டுவிட்டனர். பிறகு மீண்டும் காலை 9 மணி வரை காத்திருந்து மீண்டும் கதவைத்தட்டி திறக்காததால், உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அங்கே மூவரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு தொலைபேசி செய்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மருத்துவமனையில் மூவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மூவர் உடல்களையும் மீட்ட போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின் சாதனத்திலிருந்து எதிர்பாராமல் கசிந்த வாயுவினால் உயிரிழப்பு ஏற்படுள்ளதை அடுத்து இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: