சனி, 6 அக்டோபர், 2018

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு ! அமெரிக்காவின் தடைகளையும் மீறி ..

தினத்தந்தி : ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் உடனடியாக, ஈரானுடனான வர்த்தக உறவை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணைய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், அமெரிக்கா அறிவித்த விதித்த தடை இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதப்பட்டது. இந்த நிலையில், ஈரான் நாட்டிடம் அடுத்த மாதத்திலும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. யூரோவுக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதன் மூலம், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு  செய்திருப்பதாகத் தெரிகிறது
ஈரானிடம் இருந்து அடுத்த மாதம் 1.25 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), மங்களூரு ரிபைனரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளன

கச்சா எண்ணெய்க்கு ஈடாக இந்தியா வழக்கமாக வழங்கி வரும் யூரோ பரிவர்த்தனை இனி முடங்கும் நிலையில், அதற்குப் பதிலாக இந்திய ரூபாயைக் கொண்டே ஈரானுடன் வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதற்கு ஈரான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. யுகோ வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகியவற்றின் மூலமாக ஈரானுக்கு ரூபாயில் பரிவர்த்தனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த ரூபாய்களை, இந்தியாவிடம் இருந்து உணவு தானியங்கள், மருந்து பொருள்கள் உள்ளிட்டவற்றை தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்து கொள்வதற்கு ஈரான் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: