புதன், 3 அக்டோபர், 2018

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு இல்லை : தேவசம் ஆணையம் அறிவிப்பு!

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு இல்லை : தேவசம் போர்டு முடிவு
dailythanthi.com : திருவனந்தபுரம், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. மகர விளக்கு பூஜையின்போது இந்த கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிச் சென்று அய்யப்பனை வழிபடுவது வழக்கம்.எனினும், இந்த கோவிலில் பல நூற்றாண்டுகளாக 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை உள்ளது. இந்த வயதுக்கு உட்பட்ட காலத்தில் பெண்கள் மாதவிடாய் நிலையை எதிர்கொள்வதால் அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப் படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. அதில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி உண்டு என்று தீர்ப்பு வெளியிட்டது. 
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில், தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய  மாட்டோம் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இந்த நிலையில், தேவசம் போர்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளது. தேவசம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் கூறியதாவது: “ உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மேல்முறையீடு செய்யவில்லை. சபரிமலை தீர்ப்பு குறித்த உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை கடைப்பிடிக்க முன்வந்துள்ளோம்” என்றார்.

கருத்துகள் இல்லை: