புதன், 3 அக்டோபர், 2018

போலியோ மருந்தில் கலப்படம்:,, விசாரணை !

போலியோ மருந்தில் கலப்படம்: விரைவில் விசாரணை!மின்னம்பலம் :போலியோ சொட்டு மருந்தில் வைரஸ் கலந்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று (அக்டோபர் 1) மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய்த் தாக்குதலைத் தடுக்கும் சொட்டு மருந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் வழங்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்தில் வைரஸ் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. அதை ஒட்டி நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் உள்ள மருந்துப் புட்டிகளில் சுமார் 50,000 லிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான மருந்துகள் வரை கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான நடவடிக்கையில் இறங்கிய அரசு, போலியோ தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வழங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல் வைத்தது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பயோமெட் பிரைவேட் லிமிடெட் என்ற போலியோ தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூட சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் செப்டம்பர் 27ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். மற்ற இயக்குநர்களும் நிர்வாக இயக்குநரின் குடும்பத்தினரும் தலைமறைவாகி உள்ளனர். அத்துடன் இந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து மருந்துகளையும் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏராளமான குழந்தைகள் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் பலியானதற்கும் இந்த மருந்து கலப்படத்திற்கும் சம்பந்தம் உள்ளதா என்ற ரீதியிலும் இந்த விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட போலியோ மருந்துகளைத் திரும்பப் பெறவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை: