
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர்.
அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு, தம்மை முதல்வராக ஆக்குவதற்கு ஓபிஎஸ் கூறியதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிப்பதற்காக இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 4 நாட்களுக்கு முன்பு, பாஜகவுடன் தாம் இணைந்து தமிழக அரசை கவிழ்க்க முயற்சித்ததாக தினகரன் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தினகரன் என் மீது அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.
மேலும், ஆர்.கே நகரில் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதுபோல், கட்சியில் தினகரனின் பொய் பிரச்சாரம் பலிக்காது என தெரிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் தினகரன் இவ்வாறு செய்துவருவாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்
செல்வம், தினகரன் மிக தரக்குறைவான அரசியலை செய்துவருவதாகவும், இனி அவருக்கு
வெற்றி இல்லை வருகிற இடைத்தேர்தல்களில் அதிமுகவே வெல்லும் எனவும்
தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக