புதன், 3 அக்டோபர், 2018

நடிகை தனுஸ்ரீ நடிகர் நானா படேகர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு


மும்பை: ஆடையை அவிழ்த்துவிட்டு நடனமாடுமாறு இயக்குனர் விவேக்
அக்னிஹோத்ரி தெரிவித்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2008ம் ஆண்டில் நடந்த அந்த சம்பவம் பற்றி அவர் தற்போது மீண்டும் பேசியுள்ளார். இந்நிலையில் அவர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மீதும் புகார் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு சாக்லேட்: டீப் டார்க் சீக்ரெட்ஸ் படத்தில் நடித்தபோது இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, செட்டில் என்னை அனைவர் முன்பும் ஆடையை அவிழ்த்துவிட்டு ஆடுமாறு விவேக் கூறினார். அப்போது நடிகர்கள் இர்பான் கான் மற்றும் சுனில் ஷெட்டி தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள் என்றார்.
நடிகர் இர்பான் கானை தான் க்ளோசப்பில் காட்டும் காட்சியை படமாக்கினார்கள். நான் அந்த ஷாட்டிலேயே வர மாட்டேன். இர்பான் எதையோ பார்த்துவிட்டு ரியாக்ட் செய்ய வேண்டும்.

அப்படி இருக்கும் போது ஆடையை கழற்றிவிட்டு போய் அவர் முன்பு ஆடு. அவர் உன்னை பார்த்து முகபாவனை செய்யட்டும் என்றார். இதை பார்த்த இர்பானோ வேண்டாம் தேவையில்லை என்று கூறி எனக்கு ஆதரவளித்தார் என தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் இருந்த தனுஸ்ரீ தத்தா நாடு திரும்பியதில் இருந்து பேட்டிகளாக அளித்து வருகிறார். நானா படேகர் பற்றி அவர் மேலும் கூறியதாவது, நானா படேகர் பெண்களை அவமதிப்பவர் என்று அனைவருக்கும் தெரியும்.
அவர் எத்தனை நடிகைகளை அடித்திருக்கிறார், பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் பற்றி இதுவரை ஒரு செய்தி கூட வந்தது இல்லை என்றார்.
தனுஸ்ரீ தத்தா தன் மீது புகார் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு சிரிப்பை பதிலாக அளித்துள்ளார் நானா படேகர். தனுஸ்ரீ தத்தா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனுஸ்ரீக்கு ஆதரவாக ட்வீட் போட்டுள்ளார்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: