வியாழன், 7 ஜூன், 2018

திருமாவளவன் : அருணா ஜெகதீசன் விசாரிக்கக் கூடாது,, முன்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியவர்

அருணா ஜெகதீசன் விசாரிக்கக் கூடாது: திருமாவளவன்மின்னம்பலம் :தனது முந்தைய விசாரணைகளில் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக நீதிபதி அருணா ஜெகதீசன் செயல்பட்டுள்ளதால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அவர் விசாரிக்கக் கூடாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகப் போராடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற 100ஆவது நாள் போராட்டத்தில் 18 கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் 13 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணையை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி தனது விசாரணை அறிக்கையை மூன்று மாத காலத்துக்குள் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், “தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட வன்முறை வெறியாட்டம். மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஆலை நிர்வாகமே திட்டமிட்டு ஒடுக்குமுறையை ஏவியுள்ளது. மக்கள் பேரணியாகச் செல்லும்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் குடியிருப்புகளில் வாகனங்களுக்குத் தீ வைத்து எரித்ததற்குக் காவல் துறையே பொறுப்பு” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அருணா ஜெகதீசன் விசாரணை வேண்டாம். இதற்கு முன் நடைபெற்ற விசாரணையில் அவர் ஆளும் கட்சிக்குச் சாதகமாகவே இருந்துள்ளார். ஆகவே, பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஆணையத்தில் பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: