வியாழன், 7 ஜூன், 2018

மனைவி கொலை - பிஹார் தப்ப முயன்ற கணவர்: ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்த போலீஸார்

tamilthehindu :கொலையாளி நவ்ஷாத் மனைவியுடன், ரயில்வே ஆய்வாளர் படம்: சிறப்பு ஏற்பாடு மனைவியைக் கொலை செய்துவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் பிஹார் தப்ப முயன்ற கணவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆசாத் நகரில் தங்கி வீடுகளுக்கு மொசைக் போடும் வேலை செய்து வந்தவர் நௌஷாத் (35). பிஹாரைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி கோதல் (32) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நௌஷாத் தனது மனைவியுடன் குடும்பப் பிரச்சினை காரணமாக சண்டையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் கடந்த 6-ம் தேதி திடீரென தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு யாருக்கும் தெரியாமல் தனது இரண்டு குழந்தைகளுடன் தப்பிச் சென்றார்.
இது குறித்த தகவல் அறிந்த கேரள போலீஸார் கோதலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நௌஷாத்தைப் பிடிக்க வலைவிரித்தனர்.
நௌஷாத் தனது இரண்டு குழந்தைகளுடன் பிஹார் தப்பிச் செல்லலாம் என்பதால் அனைத்து ரயில் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து புகைப்படத்தையும் அனுப்பி வைத்தனர்.
சென்னை ரயில்வே எஸ்பி ரோஹித் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில்வே போலீஸார் நௌஷாத் புகைப்படத்தை வைத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீஸார் நேற்றிரவு 10.30 மணி அளவில் கேரளாவிலிருந்து பிஹார் செல்லும் டன்பாத் விரைவு ரயிலைச் சோதித்தனர். அப்போது பொதுப்பெட்டியில் தனது இரு குழந்தைகளுடன் பதுங்கி இருந்த நௌஷாத் சிக்கினார். அவரை போலீஸார் கைது செய்தனர்

கருத்துகள் இல்லை: