சனி, 9 ஜூன், 2018

மும்பை .. வெள்ளம் இயல்பு வாழ்க்கை முடக்கம்

மிதக்கும் மும்பை!மின்னம்பலம்: தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ரயில், விமானம், வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இதேபோன்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. தெலங்கானா, ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நிற்பதனால், வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அரசு பேருந்து குறைவான அளவே இயக்கப்படுகின்றன. ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சாலைப் போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலைக்குச் செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. மக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடுமையான மழை கொட்டி வருவதால், தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருமாறு மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மும்பையிலும் மகாராஷ்டிரத்தின் கடலோர மாவட்டங்களிலும் பல இடங்களில் பலத்த மழை முதல் மிகப் பலத்த மழை வரை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இன்று காலை 8.30 மணி வரை மும்பை நகரில் 37 மிமீ மாமழை பெய்துள்ளது; 12 மணி வரை 33.65 மிமீ மழை பதிவாகியிருந்தது என கூறியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சார சேவை பாதிக்கப்படலாம் என்பதால், உரிய பாதுகாப்புடன் இருக்குமாறு மின்சார வாரியமும் தெரிவித்துள்ளது.
இதேபோல மேற்குக் கடற்கரை மாநிலமான கோவாவிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: