வெள்ளி, 8 ஜூன், 2018

சிவகங்கை: லிஃப்ட் கேட்டவருக்கு வெட்டு! சாதியை ஏன் முதலில் கூறவில்லை என்று ..

சிவகங்கை: லிஃப்ட் கேட்டவருக்கு வெட்டு!மின்னம்பலம்: சிவகங்கையில், சாதி தெரியாமல் லிஃப்ட் கொடுத்துவிட்டு, சாதி தெரிந்ததும் தலித்தை அரிவாளால் வெட்டிய ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த குற்றவாளியைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சிவகங்கையில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்கச் சாதியினரின் சாதி வெறியால் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் கடந்த 28ஆம் தேதியன்று புகுந்து நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுப்பப்பட்டுவரும் நிலையில் மறுபடியும் ஒரு சாதிய கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது.
இதுதொடர்பாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் கதிரிடம் மின்னம்பலம் சார்பாகத் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் தெரிவித்த தகவல்கள்...

ஏனாதிகோட்டை கிராமத்தில் வசித்து வருகிற பட்டியல் சாதி இந்து பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சந்தனம் (வயது 47) என்பவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருபுவனம் வந்துள்ளார். திருமணம் முடிந்து கடந்த 3ஆம் தேதியன்று இரவு சுமார் 10 மணியளவில் தனது ஊருக்குச் செல்ல பேருந்து நிலையம் வந்துள்ளார். உரிய பேருந்து கிடைக்காத காரணத்தினால் திருபுவனம் அருகில் உள்ள தன் தங்கை வீடான பிரமனூர் கிராமத்துக்குச் செல்ல நடந்து சென்றிருக்கிறார். இடையில் நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களிடத்தில் சந்தனம், ‘என்னை பிரமனூர் கிராமத்தில் இறக்கிவிட முடியுமா?’ என்று கேட்டுள்ளார். அவர்களும் வாகனத்தில் ஏற்றச் சம்மதித்துள்ளனர்.
சற்று தூரம் சென்றவுடன் அந்த நபர்கள், ‘உங்கள் பேர் என்ன? எந்தக் கிராமம்?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு உரிய பதிலைக் கூறியிருக்கிறார் சந்தனம். ‘நீங்க என்ன ஆளு?’ என்று கேட்க, ‘நான் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று கூறியிருக்கிறார். ‘இதை முதலிலேயே சொல்ல வேண்டாமா, வண்டியை விட்டு இறங்குடா’ என்று கூறி சாதி ரீதியாக இழிவாகப் பேசி அவமானப்படுத்தியுள்ளனர்.
‘வயசுக்கு மரியாதை கொடுங்க, எதற்குச் சாதி ரீதியாகப் பேசுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு அந்தக் கும்பல் சந்தனத்தின் கன்னத்தில் அறைந்துள்ளனர். அவரது சட்டையை பிடித்துத் தாக்கவும் செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் காப்பாற்றுங்கள் என்று சந்தனம் குரல் கொடுத்திருக்கிறார். அந்தக் கும்பலில் இருந்த ஒருவன் கத்தியால் சந்தனத்தின் பின் தலையில் வெட்டியுள்ளான். நெற்றியிலும் அரிவாள் வெட்டுக் காயம், இரண்டு கைகளிலும் கத்திக்குத்து. ரத்தம் வழிந்த நிலையில் மயக்கமுற்று கிடந்திருக்கிறார் சந்தனம்.
மறுநாள் சந்தனத்தை திருபுவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். எம்எல்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். மானாமதுரை டிஎஸ்பி, எவிடன்ஸ் குழுவினரை சந்திக்க வந்திருந்தார். அவரிடத்தில் நடந்த விவரத்தைக் கூறியதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருபுவனம் காவல் நிலையத்தில் குற்ற எண்.183/2018 பிரிவுகள் 294(b), 324, 506(2) இ.த.ச. மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r), 3(1)(s) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
கச்சநத்தம் பகுதியில் கொடூரமான படுகொலைகள் நடந்தும் சாதி வெறியர்கள் துணிச்சலுடன் நடமாடிவருவது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே உடனடியாக சிவகங்கை பகுதியை வன்கொடுமை மாவட்டமாக அறிவித்துச் சிறப்பு சாதி வன்கொடுமை தடுப்பு காவல் துறை பிரிவை உருவாக்க வேண்டும். நான்கு குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சந்தனம் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும் உயர்தர மருத்துவ சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும் என்று எவிடன்ஸ் கதிர் தெரிவித்தார்.
- ர.ரஞ்சிதா

கருத்துகள் இல்லை: