புதன், 6 ஜூன், 2018

அருள்மொழி : காலா விவாதம் - கோபப்படாமல் இருக்க முடியவில்லை.. விவாதங்கள் அதிர்ச்சியளிக்கின்றன

Annamalai Arulmozhi : கோபப்படாமல் இருக்க முடியவில்லை.
நமது தோழர்கள் ஈடுபடும் விவாதங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
காலா படத்தை பார்த்தால் தமிழ் விரோதி என்ற மிரட்டல் ஒருபுறம்.
காலா பட எதிர்ப்பு ரஞ்சித்தை எதிர்க்கும் குறுக்குவழி என்ற வசவுகள் மறு புறம்.
இதற்கு நடுவில் காலாபடத்தின் வெற்றி தோல்வியை தமிழ்நாட்டு மக்களின் அரசியல் முடிவுக்கான அளவுகோலைப் போல நினைத்து காலா படம் தோற்க வேண்டும் என்ற பிரச்சாரம் இன்னொரு புறம்.

நல்ல முறையில் எடுக்கப்பட்ட ஒருபடம் மக்களை பார்க்கத்தான் தூண்டும். மக்களுக்காக போராடும் வேடம் ரஜினி காந்த் அவர்களுக்கு நன்றாகவே பொருந்தும். அது வெறும் வேடம்தான் நான் அவனில்லை என்று அவரே பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப் படுத்திக் கொண்டார்.
இதன்பிறகு அந்தப் படம் வெற்றிபெற்றால் அது படத்தின் வெற்றி.இயக்குனரின் வெற்றி என்று தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர ரஜனிகாந்த்தை ஒரு போராளியாகவும் போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்ற அவரது முழக்கத்தை அரசியல் கோட்பாடாக மக்கள் ஏற்றுக்கொண்டதாகவும் ஆகிவிடாது. வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன் என்று பேசும் ரஜினியின் தோரணை படம் பார்ப்பவர்களுக்குப் பிடிக்கும்.. ஆனால் 'ஏஏய் ...என்ற உண்மை ரஜினியை மக்கள் வெறுப்பார்கள்.. வெறுக்கிறார்கள். அந்தப் புரிதல் நமக்கு வேண்டும்.

அதேபோல இட ஒதுக்கீடு மற்றும்சாதிச் சான்றிதழ் பற்றிய புரிதல் இல்லாமல் இயக்குனர் அமீர் பேசியதை அவருடைய பேச்சிலேயே அதற்கான விளக்கம் இருந்தும்.. அந்த மேடையிலேயே இயக்குனர் ரஞ்சித் அதை விளக்கியவுடன் நான் அதை நினைத்து சொல்லவில்லை என்று திருத்திக் கொண்டதையும் மறைத்து தவறான செய்திகளைப் பரப்புவதும் அதற்கு மறுப்பு சொல்கிறேன் என்று வசைமழை பொழிவதும் எவ்வளவு பொறுப்பற்ற செயல் ...
நூறுமுறை அல்ல ஆயிரத்து முன்னூறாவது முறையாக இந்தக் கேள்வி வந்தாலும் அதைக் கேட்டவருக்கு விளக்கம் சொல்லி புரியவைக்க பொறுமையில்லை என்றால் பகுத்தறிவின் பயன்தான் என்ன ??

கருத்துகள் இல்லை: