திங்கள், 16 ஏப்ரல், 2018

பாரதிராஜா ரஜினிக்கு : இலங்கைப்போர், நியூட்ரினோ, மீத்தேன் திட்டம் பற்றி வாய்திறந்தீரா? காவிரியின் கர்நாடக தூதுவரே ..

Gajalakshmi :tamiloneindia : ரஜினியை கடுமையாக விமர்சிக்கும் இயக்குனர்
பாரதிராஜா- 
 தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் தமிழன் கொட்டிக் கொடுத்த பணத்தில் சேர்த்து வைத்த செல்வத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பாரதிராஜா பன்னாட்டுத் திரைப்பட பயிற்சிப் பட்டறை சார்பில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : 
என் இனிய தமிழ் மக்களே! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழுத் தமிழகமும் ஒரே குரலில் தங்கள் உணர்வுகளை எதிரொலித்த இந்த நேரத்தில் நம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையும் அறவழியில் போராடியது. ஆனால் நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம்மீது கத்தி வைத்துப் பதம் பார்க்க நினைக்கும் ரஜினியின் சமீபத்திய ட்விட்டர் பேச்சு! நான் அவரை கேட்கிறேன், எது வன்முறையின் உச்சகட்டம் ரஜினி அவர்களே! அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது.< வளர்ச்சிக்கு என்ன செய்தீர்?
 தங்களுடைய திரைப்படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும் உங்களைப் போன்ற ஒரு நடிகனைத் தமிழ்த்திரை உலகம் இதுவரை சந்தித்ததே இல்லை. தமிழ்நாட்டிலும் சரி, உலக அளவிலும் சரி தமிழன் கொட்டிக் கொடுத்த பணத்தில் சேர்த்து வைத்த செல்வத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
மவுனம் காத்தீர்களே இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த போது, குரல் கொடுத்தீர்களா? 
நியூட்ரினோவுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடுனீர்களா? 
இல்லை, ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? 
மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா? 
எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம் இதை ஆரம்பத்திலே கிள்ளியெறிய வேண்டும் என்கிறீர்களே! கர்நாடக காவியின் தூதுவர் கர்நாடக காவியின் தூதுவர் ஓ! இப்போது தான் பட்டவர்த்தனமாக தெரிகிறது, நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகாக் காவியின் தூதுவர் என்று. உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது, ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள், காவிரிப் பிரச்னை பற்றி எரிந்த போது வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். சேதமடைந்தது எங்கள் தமிழர்களின் சொத்துக்கள். 
தமிழர்களை வன்முறையாளர்கள் என்பதா? அங்குள்ள கலைஞர்களெல்லாம் ஒன்று கூடி, எதிர்க்குரல் கொடுத்த போதும் அங்குள்ள காவலர்கள் தமிழர்களைத் துரத்தித் துரத்தி அடித்த போதும் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அத்தனை வாகனங்களையும் அடித்து நொறுக்கிய போதும் வாகன ஓட்டிகளை நிர்வாணப்படுத்தி அடித்த போதும் வாய் திறக்காத நீங்கள். இன்று தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்துகொண்டு எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள். 
எங்களுக்குள் சிண்டுமுடிய வேண்டாம் சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான். எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியைக் கறைபடுத்த நினைத்த ஒருவன், செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம். 
நீங்கள் எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம். நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல, என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுச் சாப்பாட்டிற்கும், உங்கள் வீட்டுக் குடிதண்ணீருக்கும் சேர்த்து தான் எங்கள் வீரத்தமிழ் இளைஞர்கள் பலர் காவல்துறை நடத்திய அடிதடியில் ரத்தம் சிந்தினார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 
பேசும் போது, எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லையென்றால் எம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர்கள், அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் நன்று உணர்வீர்கள், என்பதையும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள நினைக்கிறேன் என்று பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: