வெள்ளி, 20 ஏப்ரல், 2018

ஒரு திராவிட சக்கரத்தாள்வாரின் கதை!

Karthikeyan Fastura : இதை ஒரு திராவிட நிறுவனம்
என்று சொன்னால் மிகையில்லை. ஏனென்றால் ஐந்து தென்மாநில மக்களும் இந்த நிறுவனத்தின் இமாலய வெற்றியில் பங்குபெற்றிருக்கிறார்கள். அதில் மிக அதிக பங்கு தமிழ்நாட்டை சேரும்.
இந்தக்கதை 1946ல் சென்னை திருவெற்றியூரில் இருந்து ஒரு பொம்மை தயாரிக்கும் நிறுவனமாக ஆரம்பிக்கிறது. பாசமலர் படம் ஞாபகம் வருகிறதா.. அந்தப்படத்திற்கு இந்தக் கதை ஒரு Inspiration ஆக இருந்திருக்க கூடும்.
K.M.மாமன் மாப்பிள்ளை ( ஆங்கிலத்தில் மேமன் மாப்பிள்ளை என்று விளிப்பார்கள். மலையாளத்தில் மாமன் மாப்பிள்ளை தான் அது. என்ன ஒரு பெயர்?
அப்பா புகழ் பெற்ற பத்திரிகையாளர் "கண்டதில் செரியன் மாமன் மாப்பிள்ளை". மலையாள மனோரமா இதழின் ஆசிரியர்.அது அவரது தாய்மாமா கண்டதில் வர்கீஸ் மாப்பிள்ளை உருவாக்கிய பத்திரிகை. தாய்மாமனின் பெயரை தன்பெயரில் தாங்கி இருக்கிறார் என்றால் அந்த பந்தத்தில் பாசமலர் ஒளிந்திருக்கிறது பாருங்கள்.
ஓகே நாம் K.M.மாமன் மாப்பிள்ளை கதைக்கு வருவோம். இவர் அந்த பெரும் குடும்பத்தின் கடைக்குட்டி. இவருக்கு மூத்தவர்கள் பத்திரிகை உலகில் கவனம் செலுத்த நம்ம ஹீரோ சென்னை திருவெற்றியூரில் Madras Rubber Factory என்ற பெயரில் பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் பொம்மை, ரப்பர்பேண்ட் உள்ளிட்ட ரப்பர் தயாரிப்புகளை தயாரிக்கிறார். 1960ல் ஒரு பொன்னான வாய்ப்பு வருகிறது, மேன்ஸ்பீல்ட் டயர் அண்ட் ரப்பர் கம்பெனி என்ற அமெரிக்க நிறுவனம் மூலமாக. இந்தியாவில் டயர் தயாரிக்க நல்லதொரு தொடக்க நிறுவனம் தேடும்போது மாமன்மாப்பிள்ளை அதை பயன்படுத்துகிறார். அவர்களுடன் ஒப்பந்தமிட பதிவு செய்ய வேண்டி நிறுவனத்தை Madras Rubber Factory Co Ltd ஆக பதிவு செய்தார்கள் . கேரளாவின் ரப்பர் தோட்டங்கள் இப்படிதான் பெருகியது.
1961ல் பப்ளிக் நிறுவனமாக பங்கு சந்தையில் நுழைந்தது. 12.5 லட்சம் பங்குகளை விட்டுக்கொடுத்து முதலீட்டை தேடினார்கள். அந்த முதலீட்டை வைத்து 1962ல் டயர் தொழிற்சாலையை ஆரம்பித்தார்கள். 1967ல் அமெரிக்காவிற்கு டயர் ஏற்றுமதி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெயரை பெற்றார்கள். அப்போது இருந்து அவர்களின் பங்கு ஒரே சீராக உயர்ந்து கொண்டே இருந்தது.
Mansfield நிறுவனம் தன் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியது. அப்போது தான் MRF என்று பெயரில் பதிவு செய்யப்பட்டது. இப்படி தான் MRF பிறந்தது. நாட்டில் முதன் முதலில் நைலான் டயர் உற்பத்தி செய்தவர்கள் இவர்களே. அதே போல இந்திய அரசு சுசுகி நிறுவனத்துடன் கூட்டு வைத்து உருவாக்கிய இந்திய கார் நிறுவனத்திற்கு இவர்களின் டயர் தான் பயன்படுத்தப்பட்டது.
அதன் பின் பல சாதனைகளை செய்தார்கள். தென்னிந்தியாவில் கார் ரேஸ், பார்முலா கார் ரேஸ்களை அறிமுகப்படுத்தினார்கள்.
கிரிக்கெட்டில் இவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. பாஸ்ட் பௌலர்கள் பிறப்பிடமாக சென்னையின் MRF Pace Foundation திகழ்ந்தது. 1987ல் டென்னிஸ் லில்லியை தலைமை கோச்சாக நியமித்து 2012 வரை அவர் அந்த பதவியில் திகழ்ந்தார். உலகின் மிகப்பெரிய பவுலர்கள் இங்குவந்து பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். அத்தனை திறன் வாய்ந்த களமாக இது திகழ்ந்துவருகிறது.
அதே போல பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்கள் உற்பத்தி செய்தார்கள். சச்சின் முதல் விராட்கோலி வரை இவர்களின் பேட்டை ப்ரொமோட் செய்யாத வீரர்கள் இல்லை.
இதெல்லாம் ஒரு விசயமே இல்லை இவர்கள் பங்கு சந்தையில் செய்த புரட்சியின் முன். 1961ல் பத்து ரூபாய்க்கு வெளியிட்ட MRFன் ஒரு பங்கின் மதிப்பு இன்றைய மதிப்பு 79320. ஐம்பத்தேழு வருடங்களில் 7932 மடங்கு வளர்ச்சி. கடந்த பதினைந்து வருடங்களில் 923 ரூபாயில் இருந்து 85 மடங்கு வளர்ந்து இந்த விலையை தொட்டது வேறு எந்த நிறுவனமும் இல்லை. டாட்டா, பிர்லா நிறுவனங்கள் MRFக்கு தாத்தன்கள். இருந்தும் இந்த திராவிட நிறுவனத்தின் பங்கு வளர்ச்சியை எந்த நிறுவனத்தாலும் தொடமுடியவில்லை. இந்திய பங்கு சந்தையில் மிக அதிக விலையுள்ள பங்கு இது தான். இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் 30850 தான். பாருங்கள் முதல் இடத்திற்கும் அடுத்த இடத்திற்கும் உள்ள இடைவெளியை. இத்தனை வருடங்களில் இந்திய பங்குச்சந்தை, உலக சந்தை எத்தனையோ முறை சறுக்கி இருக்கிறது. இத்தனை சறுக்களையும் சமாளித்து யாரும் தொடமுடியாத உயரத்தை எட்டி இருக்கிறது ஒரு சென்னை நிறுவனம்.
MRF நிறுவனத்தின் பத்து பங்குகளை விற்றாலே கல்யாணத்தை நடத்திவிடலாம் என்ற சொல்வடை கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறது இந்த திராவிட நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் தொழில்கொள்கைகளும், சமூக வளர்ச்சியும், அடிப்படை கட்டுமானமும் ஒரு பெரும் காரணியாக இருந்திருக்கிறது. அதனால் தான் இவர்கள் தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் பெரிய முதலீடு செய்யவில்லை. 85% தொழிற்சாலைகள், சொத்துக்கள் எல்லாம் இங்கு தான் இருக்கிறது. உண்மையில் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்றால் மிகையில்லை.
முற்போக்கு சிந்தனையும், குறைந்தபட்ச தொழில் தர்மத்தையும் கொண்டிருந்தாலே போதும் ஒரு நிறுவனம்மிகப் பெரியதாக வளரும் என்பதற்கு இவர்கள் தான் சிறந்த உதாரணம்.

கருத்துகள் இல்லை: