வியாழன், 19 ஏப்ரல், 2018

தெலுங்கு நடிகைகள் சாட்டை .. பாலியல் குற்றச்சாட்டுக்களால் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் திணறல்

பாலியல் பிரச்சினை: போராட்ட களமாகும் திரையுலகம்!மின்னம்பலம்: மூத்த நடிகைகள் ஜெயப்பிரதா, ஜெயசுதா ஆகியோர் ஸ்ரீரெட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஜீவிதா.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார் நடிகை ஸ்ரீரெட்டி. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் பவன் கல்யாண், "பாலியல் புகார் பிரச்சினையை பொதுவெளியில் சொல்வதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தை நாடலாம் " என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீரெட்டி, "அவரை அண்ணனாக நினைத்தேன். அதற்காக என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்கிறேன்" என்று செருப்பால் அடித்துக்கொண்டார். இது பவன் கல்யாண் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக அவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீதான பாலியல் புகார் குறித்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய சமூக ஆர்வலர் சந்தியா, ”நடிகை ஜீவிதா தனது கணவர் ராஜசேகருக்காக இளம்பெண்களைக் கட்டாயப்படுத்தி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்” என்று குற்றம் சாட்டினார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜீவிதா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும் போது, "என்மீது சந்தியா கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. திரையுலகினரை இழிவாக நினைக்கும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வேன். யாரையும் கட்டாயப்படுத்தி உறவுக்கு அழைத்துச் செல்ல அவர்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை. கத்துவா சிறுமிக்கு நடந்தது என்னவென்று தெரியாத வயது. ஆனால் தற்போது தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது புகார் கூறும் பெண்கள் 20 வயதுக்கு மேற்பட்ட விவரம் தெரிந்தவர்கள். திரையுலகினரை ஸ்ரீரெட்டி களங்கப்படுத்துகிறார். பல ஆண்டுகளாக ஏமாறுவதற்கு அவர் குழந்தை இல்லை. நீங்களும் அவரது பேச்சை நம்புகிறீர்கள். அவர் வெளியிட்ட புகைப்படங்களில் அவரைப் பலவந்தப்படுத்தியதாகத் தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
"மூத்த நடிகைகள் ஜெயப்பிரதா, ஜெயசுதா ஆகியோர் ஸ்ரீரெட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். ஸ்ரீரெட்டி அவருக்குப் படவாய்ப்புகள் இல்லாததால்தான் இது போன்று செய்துகொண்டிருக்கிறார். பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் யாரை நடிக்கவைத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்று நினைக்கிறார்களோ அவரைத்தான் நடிக்க வைப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
அதே போல் ஸ்ரீரெட்டிக்கு எதிராக தெலுங்கு நடிகை மாதவி லதா, பவன் கல்யாணை எப்படி குறைசொல்லலாம் என்று கூறி, தெலுங்கு பிலிம்சேம்பர் முன்னால் போராட்டம் நடத்தினார். அப்போது அவரும் அவரோடு வந்தவர்களும் ஸ்ரீரெட்டிக்கு எதிராகக் கோஷமிட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களைக் கைது செய்து பின் விடுவித்தனர்.

கருத்துகள் இல்லை: