வியாழன், 19 ஏப்ரல், 2018

ஆலமரத்துக்கு மருத்துவ சிகிச்சை!..தெலங்கானாவில் 700 ஆண்டுகள் பழைமையான ஆலமரம்

ஆலமரத்துக்கு மருத்துவ சிகிச்சை! minnamalam :தெலங்கானாவில் சுமார் 700 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் பட்டுப்போகும் தருவாயில் இருப்பதால், தற்போது அந்த மரத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலம் மெகபூபாநகர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலமரம் ஒன்று சுமார் 700 ஆண்டுகளாக மழை, வெயில் மற்றும் புயல் எனத் தாங்கி கம்பீரமாக நிற்கிறது.
இவ்வளவு பழைமையான ஆலமரம் மூன்று ஏக்கர் பரப்பளவுக்குப் பரந்து விரிந்துள்ளது. தற்போது இந்த ஆலமரத்தில் உள்ள ஒரு கிளையில் பூச்சுத்தொற்று காணப்படுகிறது. இந்த பூச்சுத்தொற்று மற்ற கிளை பகுதிகளுக்குப் பரவினால் மரம் பட்டுப்போய்விடும் அபாயத்தில் இருந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் இதுகுறித்த தகவலை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் அம்மரத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கு வருகைதந்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலமரத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மரத்துக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வனத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்பேரில், ஆலமரத்துக்கு மனிதர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போல பாட்டில்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் நிரப்பப்பட்டு தற்போது மரத்துக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், சத்து நிறைந்த உரங்களும் போடப்பட்டு வருகின்றன.
மனிதர்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதைப் போன்று ஆலமரத்துக்கும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கருத்துகள் இல்லை: