வியாழன், 15 ஜூன், 2017

தினகரன் :எடப்படியோடு அட்ஜஸ்ட் செய்துகொண்டே இருப்பதா? சசிகலா: இப்ப தேர்தல் வந்தா திமுகதான் ஜெயிக்கும் ... அதனால ...?

”சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்று டிடிவி தினகரன் திடீரென பெங்களூரு கிளம்பிப் போனார். நேற்று மாலை ஈரோட்டில் இருந்த அவரது ஆதரவாளர் புகழேந்தியை இரவோடு இரவாக பெங்களூரு புறப்பட்டு வரச் சொல்லி அழைத்திருக்கிறார் தினகரன். அவரும் அதிகாலையில் பெங்களூரு போய்ச் சேர்ந்துவிட்டார். சென்னையில் இருந்து பெங்களூரு போன தினகரன், அங்குள்ள கீஸ் ஹோட்டலில் ரெஃப்ரஷ் ஆகிவிட்டுப் பரப்பன அக்ரஹாராவுக்கு போனார். அவரோடு புகழேந்தியும் சேர்ந்து கொண்டார். ஜெயில் வாசலில், இளவரசியின் மகன் விவேக்கும் காத்திருக்க.. அவரோடு சேர்ந்து சிறைக்குள் போயிருக்கிறார் தினகரன்.
‘எடப்பாடியும் சரி... அமைச்சர்கள் சிலரும் சரி.. நான் சொல்ற எதையும் கேட்கிறதே இல்லை. இப்படியே போயிட்டு இருந்தால் கட்சி என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு. 35 எம்.எல்.ஏக்கள் இப்போ நம்ம பக்கம் வந்துட்டாங்க. இன்னும், 24 பேர் எந்த நேரத்துலயும் நம்மிடம் வரத்தயாரா இருக்காங்க. எல்லோரும் என்னோடு தொடர்ந்து பேசிட்டு இருக்காங்க. அப்படிப் பார்த்தால் கிட்டத்தட்ட 60 எம்.எல்.ஏ.-க்கள் நம்ம கையில் இருக்காங்க.
இது இல்லாமல் 17 மாவட்டச் செயலாளர்களும் நான் சொல்றதை கேட்க ரெடியா இருக்காங்க. நீங்க சொன்னதாலதான் நான் எதுவும் பேசாமல் அமைதியா இருக்கேன். நம்ம ஆட்களுக்கு எதுவும் செய்யவே கூடாது என்பதில் எடப்பாடி உறுதியா இருக்காரு. அவரை நீங்கதானே முதல்வரா உட்கார வெச்சீங்க. அந்த விசுவாசம் அவருக்கு கொஞ்சமும் இல்லை...’என்று தினகரன் சொல்லி இருக்கிறார்.
அதற்கு சசிகலா, ‘60 பேரு நம்ம பக்கம் வந்தது நல்ல விஷயம்தான். ஆனால், அவங்களை மட்டும் வெச்சுகிட்டு என்ன செய்ய முடியும். ஆட்சியைக் கலைக்கலாம். அப்படி கலைச்சிட்டு மறுபடியும் எலெக்‌ஷன் வந்தால் 10 தொகுதியில் கூட இப்போ இருக்கும் சூழ்நிலையில் ஜெயிக்க மாட்டோம். அதுக்காக எடப்பாடியோ, பன்னீரோ ஜெயிப்பாங்கன்னு நான் சொல்ல வரலை. அவங்களும் ஜெயிக்க மாட்டாங்க. ஆட்சி டிஸ்மிஸ் ஆனால், திமுக ஆட்சியை பிடிச்சிடுவாங்க. அப்புறம் அஞ்சு வருஷத்துக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது..’ என்று சொன்னாராம்.
‘அதுக்காக இப்படியே எத்தனை நாளுக்கு ஓட்ட முடியும். எல்லாத்தையும் அட்ஜஸ் பண்ணிட்டு அப்படியே போகச் சொல்றீங்களா? நாம எதும் பண்ணாமல் இருந்தால், இப்போ நம்ம பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ.-க்களும் நாளாக நாளாக அந்தப் பக்கம் போயிடுவாங்க. பவர் எங்கே இருக்கோ அங்கேதானே அவங்களும் இருப்பாங்க..?’ என்று தினகரன் கேட்டிருக்கிறார். ‘நீ என்ன கேட்டாலும், இந்த ஆட்சிக்கு நம்மால எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான் என்னோட கருத்து. அதுல எப்பவும் மாற்றம் இல்ல. நம்மகிட்ட இவ்வளவு பேரு இருக்காங்க என்பதை வெச்சு, ஆட்சியில் இருக்கிறவங்ககிட்ட எப்படி வேலை வாங்கணும்னு பாரு...எம்.எல்.ஏ.-க்கள் மட்டும் நம்ம பக்கம் வந்தால் போதாது அமைச்சர்கள் சிலரையும் நமக்கு சப்போர்ட்டா பேச வைக்கணும். அதுக்கு என்ன செய்ய முடியுமோ செய்!’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் சசிகலா.
சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் உடனே சென்னைக்கு கிளம்பாமல் மீண்டும் கீஸ் ஹோட்டலுக்குப் போயிருக்கிறார். புகழேந்தி, விவேக் ஆகியோருடன் அங்கே நீண்ட நேரம் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார். ‘சின்னம்மா சொல்றது எல்லாம் சரிதான்.. ஆனால், இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க முடியும்?’ என்றுதான் திரும்பத் திரும்ப கேட்டிருக்கிறார் தினகரன்.” மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: